அணியின் வெற்றியை கொண்டாடுவதற்கு 'ரோடு ஷோ' நடத்துவதில் தனக்கு ஒருபோதும் நம்பிக்கையில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். பலரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், இது தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் ஆர்.சி.பி அணியின் சாம்பியன் வெற்றி கொண்டாட்ட பேரணி பெங்களூருவில் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அசம்பாவிதம் குறித்து கவுதம் கம்பீர் கூறியதாவது: அனைத்தையும் விட உயிர் முக்கியமானது. எதிர்காலத்திலும் இதை சொல்வேன். எதிர்காலத்தில் 'ரோடு ஷோ' நடத்தும் போது இன்னும் நாம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வெற்றி கொண்டாட்டங்களை மூடிய கதவுகளுக்குள் அல்லது மைதானத்திற்குள் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்கள் நினைவாக எனது எண்ணம் உள்ளது. எதிர்காலத்தில் இப்படி நடக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், பேரணியை நடத்தி இருக்கவும் கூடாது. தன்னை பொறுத்தவரை 'ரோடு ஷோ' நடத்தி இருக்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளதோடு, வெற்றிக்காக 'ரோடு ஷோ' நடத்துவதில் தனக்கு ஒருபோதும் நம்பிக்கையில்லை என்று கவுதம் கம்பீர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.