தூபாய் நாட்டில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று 200 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்துள்ளது. அப்போது தரையிறங்குவதற்காக விமானிகள் விமானத்தின் வேகத்தை படிப்படியாக குறைத்து கொண்டு வந்தனர். அப்போது திடீரென்று சென்னையில் உள்ள பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிறம் கொண்ட சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளியானது துபாய் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் மீது அடிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த விமானி, சற்று நேரத்தில் சுதாரித்து கொண்டார். பின்னர் படிப்படியாக தரையிறங்கி கொண்டு இருந்த விமானத்தை உடனடியாக வேகத்தை கூட்டி மேலே பறக்க செய்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து பயணிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதனால் யாரும் அச்சமடைய தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சென்னை சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் விமான பாதுகாப்பு பிரிவான சிவில் விமானப் பாதுகாப்புத் துறை (BCAS) மற்றும் சென்னை விமான நிலைய பாதுகாப்புப் பிரிவுக்கும் உடனடியாக தகவல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் அங்குள்ள ரேடர் கருவியை பயன்படுத்தி சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளி எங்கிருந்து வந்தது என சோதனை செய்தனர். ஆனால் அந்த ஒளி சில வினாடிகளில் நின்று விட்டது.
இந்த சம்பவம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து விமானி அளித்த புகாரின் பேரில் விமான பாதுகாப்பு பிரிவான சிவில் விமானப் பாதுகாப்புத் துறை (BCAS) அதிகாரிகளும் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில் சென்னை விமானநிலையத்தை சுற்றியுள்ள பரங்கிமலை, நந்தம்பாக்கம் மற்றும் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர விசாரணை மற்றும் வாகன சோதானையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.ஏற்கெனவே கடந்த மே மாதம் 25 ஆம் தேதி துபாயில் இருந்து சென்னைக்கு 326 பயணிகளுடன்,எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்துள்ளது.
அப்போது லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மீண்டும் இதே போன்று துபாயில் இருந்து வரும் விமானங்களை குறிவைத்து லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.