(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில், முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து, 190 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். இதில் பிரியான்ஷ் 24 ரன்களில் ஹேசல்வுட் பந்திலும், பிரப்சிம்ரன் 26 ரன்களில் க்ருனால் பாண்டியா பந்திலும் ஆட்டமிழந்தனர்.
அதைத் தொடர்ந்து, ஜோஷ் இங்கிலிஸ், கேப்டன் ஷ்ரேயாஸ் களமிறங்கினர். ஆனால், ரோமரியோ ஷெப்பர்ட் 9வது ஓவரில் வீசிய பந்தில், ஜிதேஷ் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கேப்டன் ஷ்ரேயாஸ். அவர் 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார்.
தற்போது நேஹல் வதேரா (15 ரன்கள், 17 பந்துகள்), ஷஷாங் சிங் (22 ரன்கள், 14 பந்துகள்) களத்தில் உள்ளனர்.
பஞ்சாப் அணி, 16 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு, 136 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணி வெற்றிபெற 24 பந்துகளில், 55 ரன்கள் தேவை.
இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, ஆர்சிபியின் பில் சால்ட்- விராட் கோலி தொடக்கவீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பில் சால்ட் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார்.
அர்ஷ்தீப் ஓவரில் சால்ட் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். ஆனால் 2வது ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். ஜேமிஸன் வீசிய 2வது ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து சால்ட் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வால், கோலியுடன் இணைந்தார். அர்ஷ்தீப் வீசிய 3வது ஓவரில் சிக்ஸர் விளாசினார். ஜேமிஸன் வீசிய 4வது ஓவரில் கோலி, அகர்வால் தலா ஒரு பவுண்டரி அடித்து பவர்ப்ளேயில் ரன்ரேட்டை காப்பாற்றினர். 5 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் 55 ரன்கள் சேர்த்தது ஆர்சிபி அணி.
இந்த ஜோடி சற்று நம்பிக்கை அளித்த நிலையில், யுவேந்திர சஹல் வீசிய பந்தில் 24 ரன்களில் (18 பந்துகள்) ஆட்டமிழந்தார் மயங்க் அகர்வால்.
அதைத் தொடர்ந்து ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் களமிறங்கினார். 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என அதிரடியாக ஆடிவந்த ரஜத் பட்டிதார், ஜேமிஸன் வீசிய பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அவர் 26 ரன்கள் (16 பந்துகள்) எடுத்து வெளியேறினார்.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஜேமிஸன் ஸ்லோவர் பந்துகளாக வீசித்தான் விக்கெட்டுகளையும் எடுத்தார், ரன்களையும் கட்டுப்படுத்தினார். அதே பாணியை பட்டிதாருக்கும் செயல்படுத்தினார். 11வது ஓவரை ஜேமிஸன் வீசினார், முதல் 4 பந்துகள் ஸ்லோவர் பந்துகளாக ஆஃப் சைடு விலக்கி வீசி பட்டிதாரை குழப்பினார்.
திடீரென 5வது பந்தை பட்டிதாருக்கு யார்கராக வீசியநிலையில் அவரால் எதிர்வினையாற்ற முடியாமல் கால்காப்பில் வாங்கி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு கோலி, பட்டிதார் 40 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ், ஆர்சிபியின் ஒவ்வொரு பேட்டருக்கும் சரியான திட்டத்தை வகுத்து அதை கச்சிதமாக செயல்படுத்தினார். எந்த பேட்டருக்கு யார் பந்துவீசுவது, எப்படிப் பந்துவீசுவது என அவ்வப்போது ஆலோசனையும் ஸ்ரேயாஸ் வழங்கினார்.
பந்துவீச்சில் மாற்றம் செய்து பேட்டர்களையும் செட்டில் ஆகவிடாமல் தடுமாறச் செய்தார். குறிப்பாக விராட் கோலிக்கு பெரும்பாலும் ஸ்லோவர் பந்துகளை வீசச்செய்து அவரை பெரிய ஷாட் அடிக்கவிடாமல் ஷ்ரேயாஸ் கச்சிதமாக திட்டம் தீட்டினார்.
லிவிங்டன் களமிறங்கியதும், சஹலை பந்துவீசச் செய்தார் ஷ்ரேயாஸ். லிவிங்ஸ்டன் லெக்ஸ்பின் ஆடத் தெரியாது என்பதால், சஹலை பந்துவீசச் செய்து தடுமாறச் செய்தார்.
சஹல் வீசிய 12வது ஓவரில் 6 ரன்களும், வியாசக் வீசிய 13வது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே ஆர்சிபி சேர்த்தது.
சஹல் 14வது ஓவரை வீசினார். முதல் பந்திலேயே லிவிங்ஸ்டன் லாங்க் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாசினார். அதே ஓவரில் கோலியும் பவுண்டரி அடிக்க ஆர்சிபி அணி 14 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஷெப்பர்டு களமிறங்கி, ஜிதேஷுடன் சேர்ந்தார்.
15-வது ஓவரை ஓமர்சாய் வீசினார். கோலியும், லிவிங்ஸ்டனும் ஸ்லோவர் பந்துக்கு பெரிதாக ஷாட் அடிக்க முயன்று ஏமாற்றம் அடைந்தனர். 5வது பந்தை ஓமர்சாய் ஸ்லோவர் பவுன்ஸராக வீசவே, அதைதூக்கி அடித்த கோலி அவரிடமே கேட்ச் கொடுத்து 43 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணி பெரிய விக்கெட்டை இழந்து தடுமாற்றத்தின் மத்தியில் நின்றது.
அடுத்து ஜித்தேஷ் சர்மா களமிறங்கி, லிவிஸ்டனுடன் சேர்ந்தார். 16-வது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். அர்ஷ்தீப் ஓவரில் ஜிதேஷ் சர்மா 2 பவுண்டரிகளை தொடர்ச்சியாக விளாசி ரன்ரேட்டை தக்கவைத்தார்.
ஜேமிஸன் வீசிய 17-வது ஓவரை இவர்கள் வெளுத்துவாங்கினர். முதல் பந்தில் ஜிதேஷ் சர்மா கரண்டி ஷாட்டில் தேர்டு மேன் திசையில் சிக்ஸர் விளாசினார், 2வது பந்தில் லாங்க்ஆப் திசையில் 2வது சிக்ஸரை அடித்தார். 4வது பந்தில் லிவிங்ஸ்டன் மிட்விக்கெட்டில் சிக்ஸர் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினர். 5-வது பந்தில் லிவிங்ஸ்டன் ஸ்லோவர் பந்தில் கால்காப்பில் வாங்கி 25 ரன்னில் ஆட்டமிழந்தார்
18வது ஓவரை வைசாக் வீசினார். முதல் பந்தில் ஷெப்பர்ட் மிட்விக்கெட்டில் தூக்கி அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்க தவறவிட்டனர். வைசாக் வீசிய 4வது பந்தில் ஜித்தேஷ் க்ளீன்போல்டாகி 24 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
ஒரே ஓவரில் 3 விக்கெட்ஓமர்சாய் வீசிய 19-வது ஓவரில் தொடக்கத்தில் திணறிய ஷெப்பர்ட், 5வது பந்தில் பவுண்டரியும், கடைசிப்பந்தில் சிக்ஸரும் அடித்து முடித்தார். கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். 2வது பந்தில் ஷெப்பர்ட் கால்காப்பில் வாங்கி 17 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 4வது பந்தில் லாங்ஆன் திசையில் பெரிய ஷாட்டுக்கு முயன்று ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசிப்பந்தில் புவனேஷ்வர் குமாரும் ஒரு ரன்னில் ஆர்யாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி 23 ரன்களுக்கு ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது, கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது. அர்ஷ்தீப், ஜேமிஸன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஓமர்சாய், சஹல், வைசாக் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆர்சிபி அணி.
பவர்ப்ளேயில் விக்கெட்இழந்த பஞ்சாப்191 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் அணி தொடங்கியது. பிரயன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங்ஆட்டத்தைத் தொடங்கினர். புவி வீசிய முதல் ஓவரிலேயே ஆர்யா முதல் பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் பிரப்சிம்ரன் சிக்ஸரும் விளாசி அதிரடியாகத் தொடங்கினர்.
யஷ் தயால் வீசிய 2வது ஓவரில் ஆர்யா 2 பவுண்டரிகள் தட்டிவிடவே 10 ரன்கள் கிடைத்தது. ஹேசல்வுட் வீசிய 3வது ஓவரில் பஞ்சாப் பேட்டர்கள் தடுமாறி 5 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். ஆனால், ஹேசல்வுட் வீசிய 5வது ஓவரில் சிறிதும் அச்சமின்றி, 2 பவுண்டரிகள் ஆர்யா விளாசினார் கடைசிப்பந்தில் பிரயன்ஸ் ஆர்யா டீப் ஸ்குயர் லெக்திசையில் பறக்கவிடவே அங்கிருந்த சால்ட் அருமையான கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்தபின் நிலைதடுமாறி பவுண்டரி எல்லைக்குள் செல்லவே பந்தை மேலே தூக்கிவீசி பின்னர் மைதானத்துக்குள் வந்து சால்ட் அற்புத கேட்சை பிடித்து ஆர்சிபிக்கு நம்பிக்கையளித்தார்.
5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் சேர்த்து வலுவாகத் தொடங்கியது. 2வது விக்கெட்டுக்கு ஜோஸ் இங்கிலிஸ் களமிறங்கி பிரப்சிம்ரனுடன் சேர்ந்தார். யஷ் தயால் வீசிய பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் இங்லிஸ் சிக்ஸருடன் முடித்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்திருந்தது
ஆர்சிபி அளித்த அடுத்தடுத்த ஷாக்7-வது ஓவரை க்ருனால் பாண்டியா கட்டுக்கோப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சூயஷ் சர்மா வீசிய 8-வது ஓவரில் பிரப்சிம்ரன் 2 சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். க்ருனால் வீசிய 9-வது ஓவரில் பிரப்சிரம்ரன் பேட்டில் எட்ஜ் எடுத்து புவயிடம் கேட்சானது. பிரப்சிம்ரன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்ரேயாஸ் களமிறங்கினார்.
10-வது ஓவரில் திடீரென ஷெப்பார்ட் வந்தவீச அழைக்கப்பட்டார். முதல் பந்தில் இங்கிலிஸ் பவுண்டரி அடித்து அடுத்தபந்தில் ஒருரன் எடுத்தார். 4வது பந்தை சந்தித்த ஸ்ரேயாஸ், ஸ்லோவர் பந்தை கட்செய்ய முயற்சித்து அடிக்க முயன்றார், ஆனால், பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் ஜிதேஷிடம் தஞ்சமடைந்தது. ஸ்ரேயாஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
பஞ்சாப் அணி மிகப்பெரிய விக்கெட்டை இழந்து தடுமாறியது. அரங்கம் முழுவதும் ஸ்ரேயாஸ் விக்கெட் இழந்ததை எழுந்து கொண்டாடியது, மைதானத்திலும் கோலி, ஆர்சிபி வீரர்கள் துள்ளிக்குதித்து ஆர்பரித்தனர்.
ஈ சாலா கப் நமதே- இந்த ஆண்டாவது நனவாகுமா?இதுவரை நடந்த ஐபிஎல் சீசன்களில், இரு அணிகளும் அதிகபட்சமாக இறுதிப்போட்டிவரை தான் முன்னேறியுள்ளன. ஆனால், ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை. ஆதலால், இரு அணிகளுக்கும் 18 ஆண்டுகால காத்திருப்பு நனவாகப்போகிறதா, அல்லது கனவாகவே இருக்கப் போகிறதா என்பது இன்று தெரிந்துவிடும்.
ஆர்சிபி அணி கடந்த 2009, 2011, 2016 ஆகிய 3 சீசன்களில் பைனலுக்கு முன்னேறி தோல்வியடைந்து 4வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 2014ம் ஆண்டு பைனலுக்கு முன்னேறியபின் 10 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஆர்சிபி ரசிகர்களும், அணியினரும் கடந்த 18 ஆண்டுகளாக ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். "ஈ சாலா கப் நமதே" என்ற வாசகம் இந்த ஆண்டாவது நனவாகுமா என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் ஆர்சிபியின் நம்பிக்கை வீரர் விராட் கோலி, இந்த ஆண்டு இருக்கும் ஃபார்ம், அர்ப்பணிப்பு, பேட்டிங்கில் உற்சாகம் ஆகியவை எந்த சீசனிலும் இல்லாத அளவு இருப்பதால் கோப்பையை ஆர்சிபி அணிக்காக வென்றுகொடுப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.
ஆர்சிபி அணியும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் சமகலவையில் வீரர்களைக் கொண்டிருப்பது கூடுதல் சாதகமான அம்சமாகும். 8-வது வரிசை பேட்டர்கள் வரை நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்களை ஆர்சிபி அணி வைத்திருக்கிறது.
அதேபோல, ஹேசல்வுட், யஷ் தயால், புவி ஆகியோரின் வேகப்பந்துவீச்சு எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகிறது. சுழற்பந்துவீச்சில் சூயஷ் சர்மா, க்ருனால் பாண்டியா இருவரும் சிறப்பாக செயல்படுவதால், பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முதல் தகுசிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எளிதாக சுருட்டி வீழ்த்திய ஆர்சிபி அணி மீண்டும் இறுதிப்போட்டியில் மோதுகிறது. ஷ்ரேயாஸ் அய்யரை 4 முறை ஹேசல்வுட் ஆட்டமிழக்கச் செய்திருப்பதால், இன்று இருவருக்கும் இடையிலான ஆட்டம் சவாலாக இருக்கும். ஹேசல்வுட் பந்துவீச்சில் 22 பந்துகளைச் சந்தித்த ஷ்ரேயாஸ் 11 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 முறை ஆட்டமிழந்துள்ளது கவனிக்கத்தக்கது.
பஞ்சாப் அணியைப் பொருத்தவரை அதிரடியான தொடக்கம், கேப்டன் ஷ்ரேயாஸின் ஆகச்சிறந்த ஆட்டம் ஆர்சிபிக்கு பெரிய சவாலாக அமையும். பஞ்சாப் அணியும் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் ஆர்சிபிக்கு இணையாக சமபலத்துடன் இருக்கிறது.
ஆடுகளம் எப்படி?நரேந்திர மோதி மைதானத்தில் நடுப்பகுதியில் இருக்கும் ஆடுகளத்தில் ஆட்டம் நடக்கிறது. இந்த ஆடுகளம் செம்மண், கரிசல் மண் கலந்து வடிவமைக்கப்பட்ட ஆடுகளமாகும். பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளமாகவும், தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும். இந்த சீசனில் இதே ஆடுகளத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத் அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்து பெரிய இலக்காக நிர்ணயித்தால்தான் தப்பிக்க முடியும்.
ஆமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் ஆர்சிபி அணியும், பஞ்சாப் அணியும் தலா 6 போட்டிகளுக்கு மேல் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் விளையாடி அதில் 5 ஆட்டங்களில் வென்று 71.43% வெற்றி சதவீதம் வைத்திருக்கிறது.
ஆர்சிபி அணி 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் என 50% வெற்றி சதவீதத்தை வைத்திருக்கிறது.
இந்த மைதானத்தில் 43 ஐபிஎல் போட்டிகள் இதுவரை நடந்துள்ளன. இதில் முதலில் பேட் செய்த அணிகள் 21 போட்டிகளில் வென்றுள்ளன. சேஸிங் செய்த அணிகள் 22 ஆட்டங்களில் வென்றுள்ளன. இந்த சீசனில் குஜராத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி சேர்த்த 243 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோராகும்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு