உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ’தக்லைஃப்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தின் முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், “இந்தியன் 2” படம் எவ்வளவோ பரவாயில்லை என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. “நாயகன்” திரைப்படத்திற்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்திருப்பதால், இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அது மட்டுமின்றி முக்கிய கேரக்டரில் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியிருந்ததால், இந்த படமும் நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று கூறப்பட்டது.
அந்த வகையில், கமல்ஹாசன் இந்த படத்தில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார் என்றும், கமல், திரிஷா, சிம்பு ஆகியோரின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும், ஆனால் படத்தின் கதைதான் பெரிய ஓட்டை என்றும் படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக உள்ளது என்றும், இரண்டாவது பாதி ஓரளவுக்கு வேகம் எடுக்கிறது என்றும், கிளைமாக்ஸ் சிறப்பாக உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
’தக்லைஃப்’ படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஏ.ஆர். ரஹ்மானின் இசை தான் என்றும், பின்னணி இசையில் மிரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அடுத்து வரும் காட்சிகள் அனைத்தும் யூகிக்க கூடிய அளவில் தான் இருக்கிறது என்றும், “பக்கா மாஸ் என்டர்டைனர்” என்று சொல்ல முடியாத வகையில் திரைக்கதை இருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மணிரத்னம் கதையில் எந்தவிதமான புதுமையும் இல்லை என்றும், ஒரு இடத்தில் கூட ட்விஸ்ட் இல்லை என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நடிப்பு சிறப்பாக இருந்தாலும், காட்சிகளில் அழுத்தம் இல்லாமல் இருப்பதால் அவரது நடிப்பில் ஒன்ற முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன் – திரிஷா லவ் போர்ஷன் மிகவும் டல்லாக இருப்பதாகவும், சிம்பு மற்றும் அபிராமி மட்டுமே படத்தில் ஓரளவுக்கு ஆறுதல் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், வீக்கான கதை, எமோஷனல் இல்லாத காட்சிகள், எந்த விதமான டிவிஸ்டும் இல்லாத திரைக்கதை, ஆச்சரியப்பட வைக்கும் வகையில் எதுவுமே இல்லை என்பது தான் படம் பார்த்தவர்களின் கருத்தாக இருந்தது.