இந்தியா உருவாக்கிய சிறந்த விக்கெட் கீப்பர்கள் என ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் நிச்சயம் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இருக்கும். தோனியின் நிழலில் இருந்ததாலும், ஃபார்ம் போன்ற காரணங்களாலும் இந்தியா கிரிக்கெட்டில் சீராக அவரால் சோபிக்க முடியவில்லை. ஆனாலும் நிடாஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட அவரின் கடைசி பந்து சிக்ஸர் வீடியோ யூ-ட்யூப் உள்ளவரை ரீப்ளே செய்யப்பட்டு கொண்டே இருக்கும்.
தற்போது ஆர்சிபி அணி 18 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது. லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்தி இரண்டாமிடம் பிடித்த ஆர்சிபி குவாலிஃபயர் 1 மற்றும் இறுதி போட்டியை வென்று மகுடம் சூடியது. இதில் அந்த அணியின் பேட்டிங் கோச் மற்றும் மென்டரான தினேஷ் கார்த்தின் பங்கு முக்கியமானது.
அணியில் பேட்டிங் அணுகுமுறையை மாற்றியது தொடங்கி வலுவான மிடில், லோயர் ஆர்டர் மற்றும் பவுலிங் கூட்டணியை உருவாக்கியது வரை தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு வெளியில் தெரியவில்லை என்றாலும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு 'சோக்கர் (Choker)' என்கிற பட்டம் உண்டு. எவ்வளவு வலுவான அணியாக இருந்தாலும், எத்தனை மேட்ச் வின்னர்களைக் கொண்டிருந்தாலும் 'நாக் அவுட்' போன்ற முக்கியமான மற்றும் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் சொதப்பி விடுவார்கள் என்கிற வரலாறு அந்த அணிக்கு உண்டு.
ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் ஆர்சிபி தான் சோக்கர் என ரசிகர்களால் அழைக்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் டெல்லி, பஞ்சாப் மற்றும் புதிய அணியான லக்னௌ கூட இந்தத் தொடர் வரை கோப்பையைக் கைப்பற்றியது இல்லை. ஆனால் ஆர்சிபி அணிக்கு மட்டும் ஏன் இந்த பட்டம்? இந்தத் தொடருக்கு முன்பு வரை பெங்களூரு அணி 2009, 2011, 2016 என மூன்று இறுதிப் போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.
18 வருட ஐபிஎல் வரலாற்றில் பெரும்பாலான சீசன்களில் பல ஸ்டார் வீரர்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனாலும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. அதிலும், குறிப்பாக 2016ம் ஆண்டில் கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ், வாட்சன், ஸ்டெய்ன், கோலி என ஒரு நட்சத்திர பட்டாளமே இருந்தபோதிலும் ஃபைனலில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது ஆர்சிபி. அதற்கு அந்த அணியின் பேட்டிங் சொதப்பலே காரணமாக இருந்தது.
டாப் 3 பிம்பத்தை மாற்றிய தினேஷ் கார்த்திக்ஆர்சிபி அணி டார் ஆர்டர் பேட்ஸ்மன்களை நம்பியே இருந்திருக்கிறது என்பது உண்மை தான். ஒரு கட்டத்தில் கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ், விராட் கோலி என்றும் மற்றொரு கட்டத்தில் டூபிளசிஸ், கோலி, மேக்ஸ்வெல் என்கிற மூவர் கூட்டணியைச் சார்ந்தே ஆர்சிபி அணி இருந்துள்ளது. மிடில் ஆர்டர் மற்றும் ஃபினிஷிங்கில் ஆர்சிபி அணி சொதப்பும் என்கிற பிம்பம் தினேஷ் கார்த்திக்கின் வருகைக்குப் பின் தான் மாறியது.
2021 வரை கொல்கத்தா அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் அந்த ஆண்டு இறுதிப் போட்டியிலும் விளையாடி இருந்தார். இந்நிலையில் 2022-ம் ஆண்டு பெங்களூரு அணியால் ரூ.5.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
அந்த சீசனுக்கு தினேஷ் கார்த்திக்கின் பணி தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது. தோனியைப் போல விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினிஷர் என்பது இந்திய கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான காம்போ. ஆர்சிபி அணிக்கு ஃபினிஷர் ரோலுக்கென்றே அழைத்து வரப்பட்டார் தினேஷ் கார்த்திக். அந்தப் பணியை சிறப்பாக செய்தும் காட்டினார். 2022 ஐபிஎல் பெர்ஃபார்மன்ஸைத் தொடர்ந்து 2022 டி20 உலக கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார்.
டார் ஆர்டர் பேட்ஸ்மனான தினேஷ் கார்த்திக் இந்தப் புதிய ரோலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டார். மாறி வரும் விளையாட்டு சூழ்நிலைகளுக்கு தங்களது விளையாட்டு அணுகுமுறைகளை மாற்றியமைத்த வீரர்கள் வெகு சிலரே, அதில் முதன்மையானவர் தினேஷ் கார்த்திக்
2022 முதல் 2024 வரை பெங்களூரு அணிக்கு சிறந்த ஃபினிஷராக செயல்பட்டார் தினேஷ் கார்த்திக். ஆர்சிபி என்பது டாப் ஆர்டரை மட்டுமே நம்பி இருக்கும் அணி என்கிற பிம்பத்தை மாற்றியமைத்ததில் தினேஷ் கார்த்திக்கிற்குப் பெரிய பங்கு உண்டு. ஃபினிஷராக 35 போட்டிகளில் 197 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 607 ரன்கள் குவித்தார் தினேஷ் கார்த்திக்.
கடந்த ஐந்து வருடங்களில் 2023 தவிர்த்து 4 முறை ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 2024-ல் சிஎஸ்கே அணியை வென்று ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றது பெங்களூரு. எலிமினேட்டரில் ராஜஸ்தான் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதனைத் தொடர்ந்து அடுத்த ஐபிஎல் சுழற்சிக்கு முன்பான பெங்களூரு அணியின் ரிடென்ஷன் பட்டியலில் முன்னணியில் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இருந்தது. ஆனால் கரியர் ஃபார்மின் உச்சத்தில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தினேஷ் கார்த்திக். பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பெங்களூரு அணிக்கு பேட்டிங் கோச் மற்றும் மென்டராக இணைந்தார்.
பெங்களூரு அணிக்கு மென்டராக இணைந்ததுமே கோப்பையை வெல்வது தான் குறி என்பதை தெளிவாக எடுத்துரைத்தார் தினேஷ் கார்த்திக், "ஆர்சிபிக்கு வரும் எவருக்கும் ஒரே குறிக்கோள் தான் இருக்கும். அது கோப்பையை வெல்வது தான். அதோடு எங்கள் ரசிகர்களையும் ஊக்குவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
தினேஷ் கார்த்திக் 2013ம் ஆண்டு கோப்பை வென்ற மும்பை அணியின் ஒரு அங்கமாக இருந்தார். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா சென்னை அணியிடம் தோற்றது. பெங்களூரு அணியில் விளையாடிய மூன்று வருடங்களில் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை. பயிற்சியாளராக அதை வென்றாக வேண்டும் என்கிற தீர்மானத்துடன் தான் தனது பணியைத் தொடங்கினார்.
தெளிவான ஏல செயல்திட்டம் - ஆல்ரவுண்டர்களும் சாம்பியன் பவுலர்களும்ஆர்சிபி அணியைப் பொருத்தவரை விராட் கோலியைத் தவிர்த்து அதன் நட்சத்திர வீரர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். வெளிநாட்டு வீரர்களை அதிகமாக சார்ந்திருப்பதைக் குறைத்து, ஒரு கலவையான அணியை உருவாக்க வேண்டும் என ஏலத்தின் முன்பு திட்டமிடப்பட்டது.
அதற்கு ஏற்றார் போலவே ஆர்சிபி அணி விராட் கோலி, ரஜத் பட்டிதார் மற்றும் யாஷ் தயால் என மூவரை மட்டுமே ரீட்டெய்ன் செய்திருந்தது. அப்போதே ரஜத் பட்டிதார் தான் கேப்டனுக்கான வாய்ப்பு என்பது தெளிவானது. டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் மற்றும் டெப்த் ஓவர்களுக்கு என மூன்று வெளிநாட்டு வீரர்கள், ஒரு இந்திய பவர்பிளே பவுலர் மற்றும் ஒரு மிஸ்டரி ஸ்பின்னரைத் தேர்வு செய்ய வேண்டும் என ஆர்சிபி அணி தீர்மானித்தது.
2025 தொடருக்கான ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக அவர்களின் செயல்திட்டம் பற்றிய விவாதத்தை ஆர்சிபி தனது யூ-ட்யூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதில் பில் சால்ட், லியம் லிவ்விங்ஸ்டோன், டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா, ரோமாரியோ ஷெபர்ட் ஆகியோரை குறிவைப்பதாக ஆர்சிபி பயிற்சியாளர் குழு முடிவு செய்திருந்தது. அவ்வாறே ஏலத்தில் ஆர்சிபி தீர்மானித்த அனைத்து வீரர்களையும் எடுத்தது.
இத்துடன் ஜோஷ் ஹேசல்வுட், புவனேஷ்வர் குமார், சுயஷ் சர்மா மற்றும் குருனால் பாண்டியாவும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஆர்சிபி எதிர்பார்த்ததைப் போலவே ஒரு அணியை அமைத்தது.
இதில் முக்கியமான தேர்வாக அமைந்தது ஜித்தேஷ் ஷர்மா. ரூ.1 கோடி அடிப்படை விலையில் ஏலத்திற்கு வந்த ஜித்தேஷ் ஷர்மா போட்டிபோட்டு பெங்களூரு அணியால் 11 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். விக்கெட் கீப்பர், ஃபினிஷர் காம்பினேஷனை கச்சிதமாக அமைத்தது.
பெங்களூருவில் தினேஷ் கார்த்திக் விட்டுச் சென்ற வெற்றிடத்தை ஜித்தேஷ் ஷர்மாவைக் கொண்டு அவரே நிரப்பினார். ஆர்சிபி அணிக்கு வாங்கப்பட்டபோது ஜிதேஷ் ஷர்மா ஒரு அரை சதம் கூட அடித்திருக்கவில்லை. ஆனால் அவரின் பவர் ஹிட்டிங் திறமையில் அணி நம்பிக்கை வைத்தது. அவரை அணிக்கு அழைத்து வந்ததில் தினேஷ் கார்த்திக்கின் பங்கு முக்கியமானது.
இந்தத் தொடரில் அவருக்கு பெரிதாக பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரஜத் பட்டிதார் விளையாடாத ஆட்டங்களில் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். ஆனால் அணிக்கு தேவைப்பட்டபோது ஜொலித்தார் ஜித்தேஷ் ஷர்மா.
லயம் லிவிங்ஸ்டோன், குருனால் பாண்டியா, ரோமாரியோ ஷெப்பர்ட் என்கிற வலுவான ஆல்ரவுண்டர் கூட்டணியை உருவாக்கியது பெங்களூரு. அதே போல் அதன் கோர் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், யாஷ் தயால், ஜோஷ் ஹேசல்வுட், சுயஷ் சர்மா என அனைவருமே சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் விளையாடியுள்ளனர். ப்ளே ஆப் சுற்றுக்குத் தேவையான பிக் மேட்ச் ப்ளேயர்ஸ் காம்பினேஷனும் ஆர்சிபி அணிக்கு சரியாக அமைந்தது.
கடைசி லீக் ஆட்டம், முதல் 2 இடங்களைப் பிடிக்க கட்டாயம் வெல்ல வேண்டுமென்ற நிலை. முதலில் ஆடிய லக்னௌ அணி வெற்றி பெற 227 என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்திருந்தது. ஆர்சிபி அணி சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் 204 தான். அதுவும் 2010ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக வந்தது. அசாத்தியமான இலக்கை சேஸ் செய்த பெங்களூரு அணி 19வது ஓவரில் 8 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களின் அதிகபட்ச சேஸையும் பதிவு செய்தது.
இறுதிப் போட்டியிலும் ஒரு கட்டத்தில் ரன்கள் சேர்த்த பெங்களூரு அணி தடுமாறிய நிலையில் உள்ளே வந்த ஜித்தேஷ் 10 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் கேமியோ ஆடினார். ஆர்சிபி 190 என்கிற சவாலான இலக்கை நிர்ணயிக்க இது முக்கிய பங்கு வகித்தது. இறுதியில் பஞ்சாப்புக்கும் பெங்களூருவுக்குமான வெற்றி வித்தியாசம் வெறும் 6 ரன்களே.
ஏல செயல்திட்டம் தொடங்கி அணியில் யாருக்கு என்ன ரோல் என வரையறுத்து கொடுத்தது வரை தினேஷ் கார்த்திக்கின் பங்கு உள்ளது. தனது இரண்டாவது கோப்பையை இம்முறை பயிற்சியாளராக வென்ற தினேஷ் கார்த்திக், பெங்களூருவுக்கு எட்டாக்கனியாக இருந்த வெற்றிக்கனியை பெற்றுத் தந்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்தத் தொடர் முழுவதும் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தியது ஆர்சிபி அணி. ஐபிஎல் எனும் மல்டி பில்லியன் டாலர் சாம்ராஜ்யத்தில் ஆர்சிபியின் ஆதிக்க காலம் தொடங்கியுள்ளதன் அறிகுறியாகவும் இதைப் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு