கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை என பயணிகள் குற்றஞ்சாட்டி 500க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
சென்னையில் உள்ள ஒரு பெரிய பேருந்து நிலையம் என்றால் அது கிளாம்பாக்கம் பஸ் நிலையம் என்பதுதான் . இந்த பேருந்து நிலையத்தை தமிழக அரசு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று பெயர் வைத்தத்து.இதையடுத்து இந்த பேருந்து நிலையத்தை கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் அழைக்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த பேருந்து நிலையம் தமிழக அரசால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப சமீபத்தில் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.இந்தநிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் நேற்று கிளாம்பாக்கத்தில் வெகு நேரமாக காத்திருந்தும் எந்த பஸ்சும் வராததால் பயணிகள் பொறுமையை இழந்தனர். இதனையடுத்து நள்ளிரவாகியும் எந்த பஸ்சும் வராததால் ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரம் அடைந்த பயணிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
500க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நள்ளிரவில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை என பயணிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.