திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, உல்லாசமாக இருப்பது போல் நடித்து, வீடியோ எடுத்து வாலிபரை மிரட்டி நகையும் பணமும் பறித்த வழக்கில், இளம்பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பகுதியில் வசிப்பவர் கீர்த்தி (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஈரோடு மாவட்டம் அரச்சலூர், குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (27). இருவரும் பஸ் பயணத்தில் பழகி, தொடர்ந்து மொபைலில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில், கீர்த்தி ஜெகதீசனை நேரில் சந்திக்க அழைத்துள்ளார். அதன்படி, ஜெகதீசன் பெருமாநல்லூர் அருகே உள்ள சொட்டமேடு என்ற பகுதியில் வந்துள்ளார். அங்கு இருந்த கீர்த்தி, அவரை ஒரு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
பின்னர், இருவரும் நெருக்கமாக இருந்தபோது, திடீரென 2 பேர் உள்ளே நுழைந்து, இருவரையும் வீடியோ எடுத்ததாக கூறி, “சமூக வலைதளத்தில் போடுவோம்; உறவினர்களிடம் சொல்லி விடுவோம்” என மிரட்டியுள்ளனர்.
அச்சத்தில் ஜெகதீசன், கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் செயினும், கையில் வைத்திருந்த பணத்தையும் அந்த இருவரிடம் கொடுத்துள்ளார். பின்னர், கீர்த்தியை அழைத்துக்கொண்டு அவர்கள் தப்பிசென்றுள்ளனர்.
இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் ஜெகதீசன் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அருண் (33), ஈரோட்டைச் சேர்ந்த பழனிச்சாமி (51) மற்றும் கீர்த்தி ஆகியோரையும் கைது செய்தனர்.
பட்டதாரி இளம் பெண்ணான கீர்த்தியை, வாலிபருடன் தனிமையில் இருக்கச் சொல்லி, பின்னர் அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக போலீசார் தெரிவித்தனர். மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெருமாநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.