ஜி7 மாநாடு, வரும் 15 - 17ல் கனடாவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும்படி பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.
(ஜி7) பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் அமைப்பில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய ஏழு நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த இரு ஆண்டுகளில் ஜி7 மாநாடு ஜப்பான் மற்றும் இத்தாலியில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்றார். ஆனால், இந்த முறை, கனடாவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடியை கனடா பிரதமர் மார்க் கார்னி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அவருக்கு பாராட்டு தெரிவித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கனனாஸ்கிஸ் நகரில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கள் இடையேயான ஆழமான உறவு மூலம் பிணைக்கப்பட்ட துடிப்பான ஜனநாயக நாடுகளான இந்தியாவும், கனடாவும், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களுக்காக செயல்படும் என்றும், மாநாட்டில் நமது சந்திப்புக்காக ஆர்வமாக இருக்கிறேன் என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் ஆக இருந்த போது காலிஸ்தான் பயங்கரவாதிகள் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. தற்போது, புதிய பிரதமராக மார்க் கார்னி, பதவியேற்றுள்ளார். இதன் பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.