இந்தியாவில் செயற்கைகோள் வழியாக அதிவேக இணைய சேவையை தொடங்குவதற்கு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது.
நாட்டின் செயற்கைக்கோள் இணைய சேவை சந்தை விரைவாக வளர்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், தனியார் துறையும் செயற்கைக்கோள் சேவைகளை வழங்க அனுமதிக்கும் விதமாக, கடந்த 2023-இல் மத்திய அரசு இந்திய விண்வெளி கொள்கையை வெளியிட்டது. இதனை தொடர்ந்து, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
அதன்படி ஏற்கனவே, ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கான ஒப்புதலை பெற்றுள்ளது. தற்போது, ஸ்டார்லிங்க், குய்பர் ஆகிய நிறுவனங்களின் விண்ணப்பங்கள் டிராய் அமைப்பின் பரிசீலனையில் உள்ள நிலையில், கடந்த 07-ஆம் தேதி மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி கடிதம் அளித்தது.
இதன்படி, இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணைய சேவை தொடங்குவதற்கான உரிமைத்தை ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொலைத்தொடர்புத்துறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், செயற்கைகோள் வழியாக அதிவேக இணையதள சேவை வழங்க ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.