``முருகனே வந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க-வை காப்பாற்ற முடியாது..'' - ஜோதிமணி எம்.பி விமர்சனம்
Vikatan June 09, 2025 02:48 AM

கரூர் எம்.பி ஜோதிமணி ஓராண்டு சாதனை விளக்க புத்தகத்தை புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை செக் போஸ்ட்டில் பொதுமக்களிடம் வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரூர் பாராளுமன்ற தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், எனது தொகுதியில் செயல்படுத்திய நலத்திட்டங்களை புத்தகத் தொகுப்பாக வெளியிட்டுள்ளேன்.

கடந்த 20 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத முக்கிய பணிகளை நான் நிறைவேற்றியிருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.500 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளேன்.

கல்வி, மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் நலன், விபத்து நடக்கும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மேம்பாலங்கள் உள்ளிட்ட முக்கிய பணிகளை செய்துள்ளேன்.

ஜோதிமணி (கரூர் காங்கிரஸ் எம்.பி)

கடந்த ஒரு வருடத்தில் இரயில்வே மேம்பாலங்கள் 13, விராலிமலை சட்டமன்ற தொகுதியில் கொடும்பாளூர் சத்திரம் மேல பச்சைகுடி பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கொண்டமநாயக்கன்பட்டி, சன்மார் ஐ.டி.சி, லஞ்சமேடு ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மேம்பால பணிகள் நிறைவுபெற்றால் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் விபத்து இல்லா நிலைமை ஏற்படும். கரூர் விமான நிலையம், கரூர் மற்றும் மணப்பாறையில் இ.எஸ்.ஐ மருத்துவமனை, மணப்பாறையில் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி மருத்துவமனையும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம்கள், மேலும் நியாய விலை கடைகள் பயணியர் நிழல் குடைகள் மயானம் உள்ளிட்ட பணிகளும் நிறைவேற்றி உள்ளேன்.

விராலிமலையில் அரசு கலைக்கல்லூரி தொடங்க முதலமைச்சர், கல்வித்துறை அமைச்சர் ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அரசு மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ் ) தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் 123 அரசு பள்ளிகளில் கற்றல் திறனை மேம்படுத்த பாடங்களை காட்சி வடிவிலும், காணொளி வாயிலாகவும் கற்பிக்கும் ஸ்மார்ட் வகுப்பறைகளை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அறிமுகப்படுத்தி உள்ளேன்.

jothimani

இந்தியாவிலேயே கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை நாம் தொடர்ந்து பெற்று வருகிறோம். ரயில்வே நிலையங்கள், அஞ்சல் துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றால் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தமிழ் மொழி தெரியாதவர்களே உள்ளனர். எனவே, மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

கல்வி, மருத்துவம், நிதி ஒதுக்கீடு வழங்குவதில் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. முருகனே வந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க-வை காப்பாற்ற முடியாது.

நீண்ட பாரம்பர்யம் உள்ள பெரிய கட்சியான அ.தி.மு.க-வை கபளீகரம் செய்து பா.ஜ.க கட்சியினர் அழித்து விடுவார்கள். வரும் 2026 - ம் வருட தேர்தலில் இந்திய தேசிய கூட்டணி மகத்தான வெற்றி பெற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சியைப் அமைப்பார்.

ஜோதிமணி எம்.பி

மணிப்பூர் கலவரத்தில் பிரதமர் இதுவரை உள்ளே செல்லவில்லை. எங்களது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மட்டுமே சென்று வருகிறார். மணிப்பூரில் ஆளும் கட்சியாக பா.ஜ.க இருந்து வருவதால் அம்மாநில முதலமைச்சரை காப்பாற்றுவதற்காகவே இந்த வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், முதல்வரை காப்பாற்றி வருகின்றனர்" என்றார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.