சென்னை: நூதன முறையில் திருடும் பிரபல கொள்ளையன் "லேப்டாப் பாலாஜி" கைது!
Seithipunal Tamil June 09, 2025 06:48 AM

சென்னையில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் மின்வாரிய ஊழியராய் வேடமணிந்து நுழைந்து 8 பவுன் நகையை திருடிய "லேப்டாப் பாலாஜி" என்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

புழல், கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த 69 வயது திரிபுரசுந்தரி என்ற ஓய்வுபெற்ற ஆசிரியை, கடந்த மே 30ஆம் தேதி அதிகாலை வீட்டில் தனியாக இருந்தபோது, டிப்டாப் உடையில் வந்த ஒருவர், “மின்வாரிய ஊழியர், மின்கசிவு பரிசோதனைக்காக வந்துள்ளேன்” என கூறி வீட்டுக்குள் நுழைந்தார்.

முதல்மாடியில் மின்பெட்டியை பார்ப்பது போல நடித்து, அவர், திரிபுரசுந்தரியை கீழே அனுப்பிவிட்டு, வீட்டுக்குள் உள்ள ஹாலில் வைத்திருந்த 8 பவுன் நகைகளை எடுத்துச் சென்று விட்டார்.

பிறகு அவசரமாக பைக்கில் சென்றதை பார்த்து சந்தேகமடைந்த மூதாட்டி, நகைகள் இல்லாததை உணர்ந்ததும், உடனடியாக புழல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, வ.உ.சி. நகர், தண்டையார்பேட்டை சேர்ந்த பாலாஜி (36) என்பவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே 62 மேற்பட்ட திருட்டு, மோசடி வழக்குகளில் குற்றவாளியாக உள்ளவர் எனவும் தெரியவந்தது.

தலைமறைவில் இருந்த பாலாஜியை, போலீசார் ஜூன் 7 அன்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.