அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதிலிருந்தே, அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது என்பது மிகவும் சிரமமாக உள்ளது என்பதும், குறிப்பாக ஸ்டூடன்ட் விசா அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று முறை ரிஜெக்ட் செய்யப்பட்டு, அதன் பிறகு தான் விசா கிடைப்பதாக மாணவ மாணவிகள் கூறி வரும் நிலையில், சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு 10 நிமிடங்களில் விசா ஓகே ஆனதாகவும், விசா கொடுக்கும் அதிகாரி இரண்டே இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா வழங்கும் அலுவலகத்திற்கு, சென்னையை சேர்ந்த அந்த மாணவர் நேர்காணலுக்கு சென்றார். 9.30 மணிக்கு நேர்காணல் என்றாலும், 9 மணிக்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து, விசா வழங்கும் அதிகாரியின் முன் அவர் அமர்ந்தார்.
“அமெரிக்காவில் ஏன் கேம் டெவலப்மென்ட் தொடர்பான படிப்பை படிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்ட கேள்விக்கு, “இந்தியாவில் இந்த விதமான படிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் அமெரிக்கா செல்கிறேன்,” என்று பதிலளித்தார்.
அதன் பிறகு, “உங்களது நிதி ஆதாரத்தை கூறுங்கள்,” என்று கேட்டபோது, “என் அப்பா, அம்மா இருவரும் மருத்துவர்கள். இருவருமே மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்கள் வைத்திருக்கிறார்கள். முழு செலவையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். எனக்கு ஸ்காலர்ஷிப் எதுவும் தேவைப்படாது,” என்று தெரிவித்தார்.
உடனே அவருக்கு விசா ஒப்புதல் அளிக்கப்பட்டது. “ஏழு நாட்களில் வந்து பாஸ்போர்ட்டை திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்,” என்று விசா அதிகாரி கூறி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தார்.
அந்த மாணவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. “தன்னுடன் வந்த சக மாணவர்களில், பலருக்கு விசா நிராகரிக்கப்பட்ட நிலையில், தனக்கு பத்தே நிமிடத்தில் வெறும் இரண்டு கேள்விகளில் விசா கிடைத்துவிட்டதே!” என்று அவர் ஆச்சரியமடைந்தார். இவரது பதிவை பார்த்த பலர், விசா அதிகாரி ‘வாம்மா மின்னல்’ என்ற காமெடி போல் மின்னல் வேகத்தில் விசா வழங்கிவிட்டார் என்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த மாணவருக்கு விசா கிடைத்திருக்க என்ன காரணமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?