“திமுக-வை தோற்கடிக்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்” - அமித்ஷா பேச்சு..!
Top Tamil News June 09, 2025 02:48 AM

 “தமிழக மக்கள் திமுகவை தோற்கடிக்க காத்திருக்கிறார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

மதுரை ஒத்தக்கடையில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  பாஜக மாநில தலைவர் நைனார் மகேந்திரன்,  அண்ணாமலை,  வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழகத்துக்கு வந்து தமிழ் மொழியில் பேசமுடியவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன். 3000 ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட பழமை வாய்ந்த நகரம் மதுரை. வரும் ஜூன் 22ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தி தர வேண்டும், என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

மதுரை பலவிதமான மாற்றங்களுக்கு வித்திடும் மண். அந்தவகையில், இன்று நடந்துள்ள இந்த ஆலோசனைக் கூட்டமும், திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து வீட்டுக்கு அனுப்பும் மாற்றத்தைக் கொண்டு வரும். 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும். நான் நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், என்னுடைய செவியும் சிந்தையும் தமிழகத்தின் மீதுதான் இருக்கிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று கூறுகிறார். அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னால் தோற்கடிக்க முடியாமல் இருக்கலாம், ஆனால் தமிழக மக்கள் திமுகவை தோற்கடிக்க காத்திருக்கிறார்கள். என்னுடைய நீண்டகால அரசியல் அனுபவத்தில் கூறுகிறேன், தமிழக மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து கூறுகிறேன், வரும் சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்கள் திமுகவை தூக்கியெறிய காத்திருக்கிறார்கள்.

நம் நாட்டின் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு தமிழகத்தில் இருந்து நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் மிகப்பெரிய எழுச்சியும், ஆதரவும் எழுந்ததை நான் நினைவுகூற விரும்புகிறேன்” என்று கூறினார்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.