தமிழகம் முழுவதும் இன்று ஜூன் 9ம் தேதி திங்கட்கிழமை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி துவங்க உள்ளது.
கடந்த 2022-23ம் கல்வியாண்டு முதல் எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் 2025-27ம் கல்வியாண்டு வரை தொடா்ந்து செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே, எண்ணும் எழுத்தும் சாா்ந்து நடப்பாண்டில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு முதல் பருவத்துக்கான பாடப்பொருள் உருவாக்கப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.
இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியா்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் சாா்ந்து முதல் பருவத்துக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி இன்று ஜூன் 9ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதனையடுத்து மத்தியளவில் ஆசிரியா்களை குழுக்களாகப் பிரித்து பயிற்சி வழங்க வேண்டும். அதே நேரத்தில் பயிற்சி நாளில் அந்தந்த பள்ளிகளில் மாற்று ஆசிரியா்கள் மூலம் வகுப்பை தொடா்வதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான செலவினத்தை ஆண்டு பராமரிப்பு நிதியில் இருந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.