மும்பையில், ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணிகள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ந்தது போல இனி நடைபெறாமல் இருக்க மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சம்பவம் குறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
பா.ஜ., அரசு தனது 11 ஆண்டுகள் ஆட்சி நிறைவை கொண்டாடும் அதே வேளையில் மும்பையில் இருந்து வரும் துயரச் செய்திகளில் நாட்டின் யதார்த்தம் பிரதிபலிக்கிறது. பலர் ரயிலில் இருந்து விழுந்து இறந்தனர்.
இந்திய ரயில்வே கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையின் முதுகெலும்பாக உள்ளது. ஆனால் இன்று அது பாதுகாப்பின்மை, நெரிசல் மற்றும் குழப்பத்தின் அடையாளமாக மாறியுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறியதாவது: தானேவில் ரயிலில் இருந்து மொத்தம் பயணிகள் 8 பேர் தவறி விழுந்து, அவர்களில் சிலர் உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினரின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
காயமடைந்தவர்கள் உடனடியாக சிவாஜி மருத்துவமனை மற்றும் தானே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூர் நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.