"2021 போல 2026 இருக்காது" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் தொகுதிக் கணக்கால் திமுகவுக்கு தலைவலியா?
BBC Tamil June 12, 2025 03:48 AM
TNDIPR கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட கோரிக்கைகளில் நிறைவேறாத சிலவற்றை பெ.சண்முகம் பட்டியலிட்டார்.

"கூட்டணி இல்லாமல் கம்யூனிஸ்டுகளால் வெற்றி பெற முடியாது. தனித்து நின்றால் அவர்களுக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும்" எனக் கூறுகிறார், தி.மு.க செய்தித்தொடர்புத் துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்.

'கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தி.மு.க வெற்றி பெற முடியாது' என, ஜூன் 10 அன்று மா.கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அளித்த பேட்டிக்கு அவரது பதில் இவ்வாறாக இருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தால் என்ன சர்ச்சை? தி.மு.க கூட்டணிக்கு பாதிப்பா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான தீக்கதிருக்கு, அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அந்தப் பேட்டியில், "கூட்டணியில் உள்ள கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம். தற்போது உள்ள ஒற்றுமையை மேலும் காப்பாற்றும் வகையில் தி.மு.கவின் அணுகுமுறை இருக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில் தி.மு.கவை குறைகூற முடியாது. இதே நிலை தொடர வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

'மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை'

"கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது. அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் தி.மு.க ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது அல்ல" என்றும் அவர் தெரிவித்தார்.

"அதே அணுகுமுறை இந்தத் தேர்தலில் தொடரக்கூடாது" எனக் கூறியுள்ள பெ.சண்முகம், "2026 தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதை கட்சியின் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம்" என்றார்.

தொடர்ந்து, தீக்கதிரின் யூட்யூப் தளத்தில் பெ.சண்முகம் பேசுகையில், "மக்களுக்கான திட்டங்களை தி.மு.க அரசு நிறைவேற்றியபோது வரவேற்றோம். மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினோம். எதிர்காலத்திலும் நடத்துவோம்" எனக் கூறினார்.

'வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க'

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட கோரிக்கைகளில் நிறைவேறாத சிலவற்றை பெ.சண்முகம் பட்டியலிட்டார். "தேர்தல் நேரத்தில் மாதந்தோறும் மின் கட்டண அளவீடு எடுக்கப்படும் என அறிவித்தனர். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை கணக்கிடப்படும் மின்கட்டணத்தால் தாங்க முடியாத சுமை ஏற்படுகிறது" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசும்போது, "விவசாயத்துக்கான இலவச மின்சாரம் என்பது நீண்டகாலம் நடைமுறையில் உள்ளது. தற்போது இதற்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்பது தி.மு.கவின் அணுகுமுறையாக உள்ளது. இதனால் தங்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்ற பயம் விவசாயிகள் மத்தியில் உள்ளது" என்கிறார்.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது, கணக்கெடுப்பது போன்ற பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கூறும் பெ.சண்முகம், "மின்வாரியம் வலுவானதாக உள்ள நிலையில், இந்தப் பணிகளை ஏன் தனியாருக்கு விடவேண்டும்?" என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்த தி.மு.க செய்தித்தொடர்புத் துறையின் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் பேசி வருகிறார்" என்று மட்டும் பதில் அளித்தார்.

தி.மு.க முதலாளித்துவ கட்சியா? P Shanmugam/FB தி.மு.க அணியில் இடம்பெறாத கட்சிகள் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுப் போட்டியிடும் நிலையில், தி.மு.க தலைமையிலான கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்கிறார் பெ.சண்முகம்

தமிழ்நாடு அரசு கடைபிடிக்கும் தாராளவாத பொருளாதாரக் கொள்கை என்பது மாநிலத்தில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள பெ.சண்முகம், "அரசுத் துறைகளில் நிரந்தரப் பணி நியமனம் குறைவாக உள்ளது. தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்ற பெயரில் பலர் நியமிக்கப்படுகின்றனர். இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை," எனக் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், தி.மு.க தாராளவாத பொருளாதாரக் கொள்கையில் பயணிப்பதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

ஆனால், இந்தக் கருத்தை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், "இவ்வாறு கூறுவது தவறானது. பெரியாரை பார்க்காமல் இருந்திருந்தால் கம்யூனிஸ்டாக மாறியிருப்பேன் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். எங்கள் தலைவர்கள் கம்யூனிச பாதையில் இருந்து விலகவில்லை" எனக் கூறுகிறார்.

"பொருளாதார அடிப்படையில் கம்யூனிச பாதையிலும் சமுதாய முன்னேற்றம், சமத்துவப் பாதையில் பெரியாரையும் கடைபிடித்து வருகிறோம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"சாம்சங் இந்தியா தொழிலாளர் போராட்டம் உள்பட சில விவகாரங்களில் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்ததே?" எனக் கேட்டோம்.

"சாம்சங் என்பது தனியார் நிறுவனம். அவர்கள் இங்கு தொழிற்சாலையை அமைக்கும்போது இந்திய சட்டங்களை மீறிச் செயல்பட்டதால் எதிர்த்தனர். அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று" எனக் கூறினார்.

"சாம்சங் இந்தியா நிறுவனத்தால் ஏற்படும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவை மிக முக்கியமானது. அவர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறினால் என்ன செய்வது? இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் தலையிட்டு சமரச முடிவை ஏற்படுத்தினார்கள்" எனக் கூறுகிறார் டி.கே.எஸ்.இளங்கோவன்.

"அவர்கள் கட்சியின் கொள்கைகளின் அடிப்படையில் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பது என்பது இயல்பானது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

'தனித்து வெற்றி பெறுவது சாத்தியமில்லை' Edappadi K Palaniswami/X எதிர்த்தரப்பில் அணி சேரும்போது, திமுக தரப்பில் கூட்டணியாக நிற்பது அவசியம் எனக் குறிப்பிட்டார் பெ.சண்முகம்

"தமிழ்நாட்டில் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோதும் தி.மு.க தனித்து நின்று வெற்றி பெறுவது சாத்தியமில்லை" என செய்தியாளர்களிடம் கூறிய பெ.சண்முகம், "அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்துள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலைப் போல தி.மு.க-வுடன் இணைந்து போராட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தி.மு.க தனித்து நின்று வெற்றி பெற முடியாது என, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி குறித்து பெ.சண்முகத்திடம் பிபிசி தமிழ் கேட்டது.

"தி.மு.க அணியில் இடம்பெறாத கட்சிகள் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுப் போட்டியிடுகின்றன. தி.மு.க தலைமையிலான கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. அது தி.மு.கவாக இருந்தாலும் கம்யூனிஸ்டாக இருந்தாலும் இதுதான் நிலை" எனக் கூறினார்.

அதோடு, "எதிர்த் தரப்பில் அணி சேர்ந்து கூட்டணியாக நிற்கும்போது, தி.மு.க தரப்பிலும் கூட்டணியாக நின்றால் மட்டுமே வெற்றி பெற முடியும். மா.கம்யூ கட்சி தனியாக நின்றாலும் வெற்றி பெற முடியாது. அது தி.மு.க-வுக்கும் பொருந்தும்" என்றார்.

இதுகுறித்துப் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், "பெ.சண்முகத்தின் கருத்தை தி.மு.கவுக்கு எதிரானதாகப் பார்க்கவில்லை" எனக் கூறுகிறார்.

அதோடு, "கூட்டணி இல்லாமல் தி.மு.க வெற்றி பெற முடியுமா என்பதைத் தாண்டி அவர்களாலும் வெற்றி பெற முடியாது. தனித்து நின்றால் கம்யூனிஸ்டுகளுக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். மக்களுக்கும் தெரியும்" எனவும் கூறுகிறார்.

கடந்த 2021 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ஆறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இதை மேற்கோள் காட்டிய பெ.சண்முகம், "அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டிய சூழல் இருந்ததால் இந்த எண்ணிக்கையை ஏற்றுக் கொண்டோம். ஆனால் 2026 தேர்தலில் அதிக இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி போட்டியிடும்" எனக் கூறினார்.

"தொகுதிப் பங்கீட்டில் விட்டுக் கொடுத்து கூடுதல் தொகுதிகளை தி.மு.க ஒதுக்குவதன் மூலம் சட்டமன்றத் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்த முடியும்" எனவும் அவர் தெரிவித்தார்.

இதை வரவேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "எந்தக் கட்சியாக இருந்தாலம் இப்படித்தான் சிந்திக்க முடியும். நாங்களும் அப்படித்தான்" எனக் கூறினார்.

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெற முயல்வது வழக்கமானது. பேச்சுவார்த்தையின்போது மனம் விட்டுப் பேசி இறுதி முடிவை எடுப்போம்" எனக் கூறினார்.

'பேர வலிமையைக் கூட்டும் யுக்தி' Shyam/FB மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்

தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள், தங்களின் பேர வலிமையைக் கூட்டுவதற்கான யுக்தியாகத்தான் இதைப் பார்ப்பதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கூட்டணியில் பெரிய கட்சியான தி.மு.க, 160 முதல் 170 இடங்களில் போட்டியிட வேண்டும். மற்ற கட்சிகளுக்கு சுமார் 60 முதல் 70 இடங்களை மட்டுமே பிரித்துக் கொடுக்க முடியும். கூடுதலாகக் கொடுப்பதற்கு வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற ஒன்றை ஏற்படுத்தி அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகித்ததைக் குறிப்பிட்டுப் பேசும் ஷ்யாம், "தேர்தல் முடிவில் தி.மு.க, அ.தி.முக ஆகிய கட்சிகளுக்கு இடையில் ஒரு சதவிகித வாக்கு வித்தியாசம் மட்டுமே இருந்தது. தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேறு போக்கிடம் இல்லை" என்கிறார்.

த.வெ.க உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா?

தற்போதைய அரசியல் சூழலில் பா.ம.க குழப்பத்தில் உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செல்வதற்கு வாய்ப்பில்லை. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பதற்கு முடிவு செய்தால்கூட, அவர்களின் கட்சிக்குள் எதிர்ப்பு இருக்கும்" எனக் கூறுகிறார்.

"சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என நினைப்பவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு தேர்வாக நினைக்க மாட்டார்கள். எந்த அணியில் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதை முக்கியமாகப் பார்ப்பார்கள்" எனக் கூறுகிறார் ஷ்யாம்.

இதே கருத்தை முன்வைக்கும் டி.கே.எஸ்.இளங்கோவன், "தி.மு.க-வின் கொள்கைகளில் உடன்பாடு கொண்டவர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாதார, சமுதாயக் கொள்கை என்ன என்பதை அவர்கள் கூறவில்லை. அங்கே செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை" என்கிறார்.

'பிரச்னைகள் இருக்கவே செய்யும்' P Shanmugam/FB

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல தி.மு.க அணியில் உள்ள இதர கட்சிகளும் கூடுதல் இடங்களைக் கேட்பதற்கான சூழல்கள் உருவாகும் எனக் கூறும் ஷ்யாம், "கூட்டணிப் பேச்சுவார்த்தையில், 'எங்களால் முடிந்தது இவ்வளவுதான்' என தி.மு.க கூறுவதற்கே வாய்ப்புகள் அதிகம். ஒருகட்டத்துக்கு மேல் எண்ணிக்கையைக் கூட்ட முடியாது" எனக் குறிப்பிட்டார்.

"ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை" எனக் கூறும் டி.கே.எஸ்.இளங்கோவன், "அனைவரும் அமர்ந்து பேசி முடிவு செய்வார்கள். எண்ணிக்கை என்பது முக்கியப் பிரச்னை இல்லை. 234 இடங்களிலும் வெற்றி பெற்றால் அதிக எம்.எல்ஏ-க்கள் அக்கட்சிகளுக்குக் கிடைப்பார்கள்" என்கிறார்.

"சட்டமன்றத் தேர்தலின்போது, அதிக இடங்களைக் கட்சிகள் கேட்பது என்பது வழக்கமானது. தங்கள் கட்சியின் சார்பில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என நினைக்கின்றனர். ஒரு சீட் வாங்கி வெற்றி பெற்ற கட்சிக்குக்கூட இந்த எண்ணம் இருக்கும்" எனக் கூறுகிறார், டி.கே.எஸ்.இளங்கோவன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பத்து கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியில் அவர்கள் வெற்றி பெறக்கூடிய இடங்களைத் தேர்வு செய்து போட்டியிட வைப்பது வழக்கம். கடந்த முறையைவிட அதிக இடங்களில் போட்டியிடவே விரும்புவார்கள். அதில் தவறு இல்லை" என்றார்.

"ஆனால், மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க இருக்கும்போது, எது நியாயமான முடிவாக இருக்குமோ அவற்றையெல்லாம் பேசி முடிவு செய்வார்கள். சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். நாங்கள் எந்தக் கட்சிகளையும் விட்டுவிடவில்லை" எனவும் டி.கே.எஸ்.இளங்கோவன் குறிப்பிட்டார்.

தொடரும் விமர்சனங்கள் BBC கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள் ஈடுபட்டனர்

விழுப்புரத்தில் கடந்த ஜனவரி மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அந்தக் கட்சியின் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.

மாநாட்டில் தி.மு.க அரசை விமர்சித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமலில் உள்ளதா? இந்த ஆட்சியில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. போராட்டம் செய்கிறவர்களைக் கைது செய்யும் அவல நிலை நீடிக்கிறது" என விமர்சித்தார். இதைக் கண்டித்து தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டது.

அப்போது இதுகுறித்துப் பேட்டியளித்த பெ.சண்முகம், "மக்கள் பிரச்னைகளில் சமரசமற்ற போராட்டங்களை நடத்துவதால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளது. தி.மு.கவின் வெளிச்சத்தில் மா.கம்யூ செயல்படுவது போன்ற ஒரு செய்தியை முரசொலியில் வெளியிட்டுள்ளனர். அது சரியானது அல்ல" எனக் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயலில் பட்டியல் பிரிவு மக்கள் பயன்படுத்தும் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் தி.மு.க அரசை பெ.சண்முகம் விமர்சித்தார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டதாக சி.பி.சி.ஐ.டி தெரிவித்திருந்தது. "வழக்கை முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளி ஆக்குகின்றனர். ஆகவே வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்" எனக் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் பட்டியல் பிரிவு மக்கள் மீது பிற சாதியினர் நடத்திய தாக்குதல், பஞ்சமி நில மீட்பு விவகாரம் ஆகியவற்றிலும் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை மா.கம்யூ கட்சி கடுமையாக விமர்சித்திருந்தது.

இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் தயவு இல்லாமல் தி.மு.க-வால் வெற்றி பெற முடியாது என அக்கட்சியின் மாநில செயலாளர் கூறியிருப்பது தி.மு.க வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.