உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள சி.டி.ஓ பங்களா அருகே, சாலை நடுவே மனைவி தன் கணவரை செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடுரோட்டில் நடந்ததால், பலர் இந்த சண்டையைக் காண நேரில் கூடிவிட்டனர். கோட்வாலி காவல் நிலையப் பகுதிக்குள் வரும் இந்த சம்பவம், ஒரு குடும்பத் தகராறு சாலையிலே பெரும் ரகளையாக மாறியது.
கடந்த சில மாதங்களாக அவரது கணவர் சரியாக தன் மனைவியுடன் பேசாமல் இருந்ததோடு வீட்டுச் செலவுகளுக்குப் பணம் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதோடு கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவருடன் சுற்றித் திரிவதை அறிந்ததும், மனைவி கடும் கோபத்தில் அவரது கணவரைத் நகரம் முழுவதும் தேடி வந்துள்ளார். இந்நிலையில் தன் கணவனை ஒரு பெண்ணுடன் பார்க்கும்போதே மனைவி சாலையில்சண்டையில் ஈடுபட்டு, இருவரையும் திட்டிவிட்டு, கணவரை செருப்பால் அடிக்க தொடங்கினார்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் கூட்டம் கூடியது, மக்கள் மொபைலில் வீடியோ எடுக்கத் தொடங்கினர். சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதும், கோட்வாலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர், அங்கு பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மனைவியின் புகாரின் அடிப்படையில், கணவர் விவாகரத்து செய்யாமல் மீண்டும் திருமணம் செய்திருந்தால், அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சமூகத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.