கீழடி அகழாய்வு அறிக்கையில் போதுமான ஆய்வுத் தகவல்கள் இல்லையென மத்திய அமைச்சர் கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அமைச்சர் இதற்கு பதில் கொடுத்திருக்கிறார். அறிக்கையின் இப்போதைய நிலை என்ன?
கீழடி குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், அதனை ஏற்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் ஒரே ஒரு கண்டுபிடிப்பு மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிடாது என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருப்பது இந்த விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரின் கருத்துநரேந்திர மோதி தலைமையிலான அரசின் 11 ஆண்டு கால சாதனைகள் குறித்து சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட கீழடி அகழாய்வின் ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், அந்த ஆய்வறிக்கையை ஏற்க அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகள் இன்னும் தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.
"அவை (அறிக்கையின் முடிவுகள்) அறிவியல் ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. தொல்லியல் ஆய்வாளர் தந்த ஆய்வு முடிவுகளை ஏற்பதற்கு முன்பாக நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.
இன்னும் கூடுதல் தகவல்களுடன், ஆதாரங்களுடன், ஆய்வு முடிவுகளுடன் வரட்டும். ஒரே ஒரு கண்டுபிடிப்பு (வரலாற்றின்) போக்கை மாற்றிவிடாது. பிராந்தியவாதத்தை வளர்க்க அதிகாரத்தில் இருப்பவர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது சரியானதல்ல. இதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எல்லா விதங்களிலும் ஆய்வுகள் முடிவடையட்டும்" என்றார் கஜேந்திர சிங் ஷெகாவத்.
கீழடி அகழாய்வு அறிக்கை மீது, இந்தியத் தொல்லியல் துறை சில கேள்விகளைக் கேட்டு திருப்பி அனுப்பியிருந்தது ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், மத்திய அமைச்சரின் இந்தக் கருத்து வந்து சேர்ந்திருக்கிறது.
கஜேந்திர சிங் ஷெகாவத்தின் இந்தக் கருத்துக்கு தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக எதிர்வினையாற்றினார்.
"முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள்தான் வேறு வேறாக இருக்கிறது.
5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?" என்று கேள்வியெழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்" என்று குறிப்பிட்டார்.
மதுரை நகரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கீழடி என்ற கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறையால் அகழாய்வு துவங்கப்பட்டது.
தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2014 - 15, 2015- 2016 என இரு கட்டங்களாக இந்த அகழாய்வு நடைபெற்றது.
இந்த அகழாய்வில் பரந்த அளவில் கட்டடத் தொகுதிகள் கண்டறியப்பட்டன. தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகள் எதிலும் இவ்வளவு பெரிய அளவில் கட்டடத் தொகுதிகள் கண்டறியப்படாத நிலையில், கீழடியில் வெளிவந்த கட்டடத் தொகுதிகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்குப் பிறகு, அந்த அகழாய்வுப் பணியிலிருந்து அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு, வேறொரு கண்காணிப்பாளரின் கீழ் அடுத்த கட்ட அகழாய்வு நடந்தது.
இதற்குப் பிறகு கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை நிறுத்திக்கொண்டது. இதற்குப் பிறகு தமிழ்நாடு அரசு, பல கட்டங்களாக கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
கீழடி அகழாவுக்குப் பிறகு அமர்நாத் ராமகிருஷ்ணா கவுகாத்திக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்குப் பிறகு கோவாவுக்கும் பிறகு சென்னைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னையில் தென்னிந்தியக் கோவில்களின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். தற்போது டெல்லியில் தொல்லியல் பொருட்கள் பிரிவின் இயக்குநராக அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கை 982 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, அறிக்கை அமர்நாத் ராமகிருஷ்ணாவிடமே திருப்பி அனுப்பப்பட்டது. இது தொடர்பான கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கீழடியில் நடந்த அகழாய்வின் அடிப்படையில் பார்க்கும்போது, அங்கே மூன்று பண்பாட்டு காலகட்டங்கள் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதுவதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என்றும் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம் என்றும் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் குறித்துத்தான் சில கேள்விகளை இந்தியத் தொல்லியல் துறை எழுப்பியிருந்தது.
1. கீழடியில் நிலவியதாகச் சொல்லப்படும் மூன்று காலகட்டங்களுக்கும் சரியான பெயர்களை (nomenclature) வழங்க வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
2. முதலாவது காலகட்டம், கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என அறிக்கை கூறும் நிலையில், அதற்கு உறுதியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற இரண்டு காலகட்டங்களையும் ஏஎம்எஸ் காலக் கணிப்பு முறையின் (Accelerator Mass Spectrometry) படி உறுதிசெய்ய வேண்டும். முதல் காலகட்டத்திற்கு தற்போது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலக் கணிப்பு மிகக் கூடுதலாகத் தெரிவதாகவும் அதிகபட்சமாக இந்தக் காலகட்டம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் குறிப்படப்பட்டுள்ளது.
3. அறிவியல்ரீதியாக கிடைத்த தேதிகளுக்கு ஆழத்தைக் குறிப்பிடுவது மட்டும் போதுமானதல்ல. பண்பாட்டு அடுக்குகளின் எண்களையும் தரவேண்டும். அப்போதுதான் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
4. அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள வரைபடங்களுக்குப் பதிலாக மேம்பட்ட வரைபடங்களை வழங்க வேண்டும். கிராமத்தின் வரைபடம் தெளிவில்லாமல் உள்ளது. ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடும் வரைபடம், பண்பாட்டு அடுக்குகளின் வரைபடம், எங்கு தோண்டப்பட்டது என்பதைக் குறிப்பிடும் வரைபடங்கள் தேவை என இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
இதற்குப் பிறகு, தான் சமர்ப்பித்த அறிக்கையே மிகத் தெளிவானது என்றும் கூடுதல் தகவல்களை அளிக்க வேண்டியதில்லை என்றும் இந்தியத் தொல்லியல் துறைக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் பதிலளித்ததாக தகவல்கள் வெளியாயின.
இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மறுத்துவிட்டார்.
"இது போன்ற அறிக்கைகள் சமர்ப்பிக்கும்போது, அதனை ஆய்வு செய்யும் அதிகாரி, ஏதாவது சான்றுகள் தேவை எனக் கருதினால் இதுபோலக் கேள்வி எழுப்புவார்கள். இது அறிக்கையையும் கேள்வி எழுப்பும் அதிகாரியையும் பொறுத்தது. காலக் கணிப்பைப் பொறுத்தவரை, அது அறிவியல் ரீதியில் செய்யப்பட்டு அதற்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் சந்தேகமில்லை" என்கிறார் மொஹாலியில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச்சின் தொல்லியல் துறை பேராசிரியரான முனைவர் பர்த் சௌஹான்.
கீழடி அகழாய்வின்போது முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளில் ஆய்வுக்கான மாதிரிகளாக 88 கரிமப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அதில் 23 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. இவற்றில் 18 கரிமப் பொருட்கள் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் ஏஎம்எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 5 கரிமப் பொருட்கள் புது டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிடி அக்சலரேட்டர் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இது தவிர, கீழடியில் கிடைத்த மிருக எலும்பின் மாதிரிகள் டெக்கான் கல்லூரிக்கு அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கீழடியில் தான் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார். அந்த ஆய்வறிக்கையில் பின்வரும் முக்கிய முடிவுகள் குறிப்பிடப்பட்டிருந்தன:
1. கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, இங்கே மூன்று பண்பாட்டு காலகட்டங்கள் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், கீழடியில் எளிதில் மட்கிப் போகக்கூடிய (செங்கல் அல்லாத, மரம் போன்ற) பொருட்களால் கட்டுமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழடி இரும்புக் காலத்தில் வளரத் தொடங்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும் என்றாலும்கூட, தொடர்ந்து இந்தத் திசையில் ஆய்வுகளை நடத்த வேண்டும்.
2. கீழடியின் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம். இதுதான் கீழடி, ஒரு முதிர்ந்த வாழிடப் பகுதியாக இருந்த காலகட்டம். பெரிய மற்றும் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கே கிடைத்த செங்கலால் ஆன மேடைகள், சிக்கலான செங்கல் கட்டுமானங்கள், இரட்டைச் சுவர்களைக் கொண்ட உலைகள் ஆகியவை இந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை. இந்த காலகட்டத்தில் கீழடி நகரப் பண்புகளைக் கொண்ட மிக முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கது இங்கு கிடைத்த கட்டடத் தொகுதிகள்தான். அரிக்கமேடு, காவிரிப்பட்டனம், கொற்கை போன்ற ஒரு சில இடங்களைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு எங்கு இந்த காலகட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கிடைத்ததில்லை.
3. கீழடியின் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது. இந்த இரு அகழாய்விலும் இங்கு கிடைத்த காசுகள், அதற்கு முன்பாக இங்கு கிடைத்த ராஜராஜன் காலத்து காசுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இந்த மூன்றாவது காலகட்டம் பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆகவே, கீழடியின் காலகட்டம் என்பது கி.மு. எட்டாம் நூற்றாண்டில் துவங்கி கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கிறது.
4. கீழடியில் குதிரையின் எலும்புகள் கிடைத்திருப்பது தென்னிந்திய தொல்லியல் ஆய்வுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சங்கப் பாடலான பட்டினப்பாலையில் குதிரை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் எச்சங்கள் முதல் முறையாக கீழடியில்தான் கிடைக்கின்றன.
5. இரண்டு அகழாய்வுகளிலும் சேர்த்து மொத்தமாக 2,447 பானை ஓட்டு கிறுக்கல்கள் கிடைத்துள்ளன. பல தமிழ் பிராமி எழுத்துகளும் கிடைத்துள்ளன. 'திசன்' போன்ற பிராகிருத வார்த்தைகளும் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்த பிராகிருத வார்த்தைகள் இலங்கையின் தாக்கத்தில் வந்தவை. இங்குள்ள தமிழ் பிராமி அல்லது தமிழி எழுத்து, அசோக பிராமியின் தாக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக இலங்கையில் கிடைத்த பிராமி எழுத்துகளோடு ஒத்துப்போகக்கூடியவை என்றது அறிக்கை.
6. வைகை நதிக் கரையில் அமைந்த ஒரு நகர நாகரீகத்தின் ஆரம்ப கட்டத் தகவல்களை மட்டுமே இந்தத் தொல்லியல் ஆய்வு முடிவுகள் அளித்திருக்கின்றன என்றும் அந்தத் தொல்லியல் தளத்தில் மேலும் பல ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு