இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே தொடங்கியுள்ள மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? இஸ்ரேலுடனோ அல்லது இரானுடனோ இந்தியா நிற்பது அவ்வளவு எளிதானதா?
இத்தகைய சூழ்நிலையில், இஸ்ரேலும் இரானும் ஒரு முழுமையான போரில் ஈடுபட்டால், அது இந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுகிறது.
"இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு சமநிலையில் இருக்கும். உலகின் பிற நாடுகளைப் போலவே, இந்தியாவும் இரான் அணு ஆயுதம் பெறுவதை ஆதரிக்கவில்லை" என்று கபீர் தனேஜா கூறுகிறார். இவர், ஓஆர்எஃப் (ORF) என்ற சிந்தனைக் குழுவின் மூலோபாய ஆய்வுகளின் உறுப்பினராக உள்ளார்.
"இந்தியா இஸ்ரேலை ஆதரிக்கும், ஆனால் அது நிபந்தனையற்றதாக இருக்காது. இரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை இந்தியா நிச்சயமாக ஆதரிக்காது" என்று இந்தோ-பசிபிக் ஆய்வாளர் டெரெக் கிராஸ்மேன் நம்புகிறார்.
கடந்த மாதம், இந்தியா பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்திய போது, இஸ்ரேல் இந்தியாவை வெளிப்படையாக ஆதரித்தது. இந்தியாவுக்கு தற்காப்பு உரிமை உண்டு என்று இஸ்ரேல் கூறியது.
அதேசமயம், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர இரான் மத்தியஸ்தம் செய்ய முயன்றது, ஆனால் வெளிப்படையாக யாருடைய பக்கத்தையும் எடுக்கவில்லை. இரான் தன்னை நடுநிலையாக காட்டிக் கொண்டது.
இஸ்ரேல்- இரான் ஆகிய இரு நாடுகளும் ராஜீய ரீதியாக பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்றும், மோதலைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
"இந்தியா, இரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுடனும் நட்புறவைக் கொண்டுள்ளது. நாங்கள் எல்லா வகையிலும் உதவத் தயாராக உள்ளோம்" என்று இந்தியா தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் அஃப்தாப் கமல் பாஷா, "இந்த மோதல் இப்போதைக்கு நிற்காது, ஆனால் வரும் நாட்களில் போருக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்று கூறுகிறார்.
"இரான் இப்போது தாக்காமல் இருக்கலாம், ஆனால் அது பழிவாங்கும். இந்தத் தொடர் நிகழ்வு நிற்காது. இந்தப் போரில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்று கூறினாலும், இஸ்ரேலிய போர் விமானங்கள் கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்திலிருந்துதான் எரிபொருளைப் பெறுகின்றன" என்று பேராசிரியர் பாஷா கூறுகிறார்.
''இதில் அமெரிக்காவின் பங்கு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இஸ்ரேலைத் தாக்க இரான் அனுப்பிய டிரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இரானிய டிரோன்கள் இஸ்ரேலை அடைய அமெரிக்கா அனுமதிக்கவில்லை. இது தவிர, சௌதி அரேபியாவும் ஜோர்டானும் அமெரிக்காவின் அழுத்தத்தால் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு அனுமதி அளித்தன. இந்தப் போர் இரான் மற்றும் இஸ்ரேலுடன் மட்டும் நின்றுவிடாது என்று கூறுகிறேன்.'' என்று கூறியவர் தொடர்ந்து பேசினார்.
"சௌதி, கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அமெரிக்கா செல்வாக்கின் கீழ் உள்ள நாடுகள். அமெரிக்கா என்ன சொன்னாலும் அவர்கள் செய்வார்கள்" என்று பேராசிரியர் பாஷா கூறுகிறார்.
இஸ்ரேல் மற்றும் இரான் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவிற்கு ஏதேனும் குழப்பம் உள்ளதா?
இதற்கு பதிலளித்த பேராசிரியர் பாஷா, "எந்த குழப்பமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவை ஆதரித்த ஒரே நாடு இஸ்ரேல். அத்தகைய சூழ்நிலையில், இந்தியா இஸ்ரேலுடன் நிற்கும். இரானுடனான அனைத்து உறவுகளையும் நாம் ஏற்கனவே மட்டுப்படுத்தியுள்ளோம். நாம் எண்ணெய் அல்லது எரிவாயுவை அவர்களிடமிருந்து வாங்கவில்லை. சாபஹரை (இரானில் உள்ள ஒரு துறைமுக நகரம்) நம்மால் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை. அமெரிக்கா விரும்புவதையும் இந்தியா செய்யும்." என்கிறார்.
இரான் மீதான தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரே நாளில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியில் போருக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது.
உலக எண்ணெய் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட பகுதி இது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 78 அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. மார்ச் 2022க்குப் பிறகு ஒரு நாளில் கச்சா எண்ணெயின் விலை மிக விரைவாக உயர்ந்துள்ளது.
சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வு நாடாக இந்தியா உள்ளது. வரலாற்று ரீதியாக, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC- ஜிசிசி) 6 நாடுகள், பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான் மற்றும் இராக் ஆகியவை இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கும் முதன்மையான நாடுகள்.
இந்தியாவின் மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் ஜிசிசி 50 முதல் 60 சதவீதம் வரை பங்களிக்கிறது. இந்திய வர்த்தக அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2023-24 ஆம் ஆண்டில் பெட்ரோலியம் வழங்கும் முதல் 10 நாடுகளில், இராக் இரண்டாவது இடத்திலும், சௌதி அரேபியா மூன்றாவது இடத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நான்காவது இடத்திலும், கத்தார் ஏழாவது இடத்திலும், குவைத் ஒன்பதாவது இடத்திலும் இருந்தன. ரஷ்யா முதலிடத்தில் இருந்தது. 1980களில் இருந்து கச்சா எண்ணெய்க்காக இந்தியா வளைகுடா நாடுகளையே சார்ந்துள்ளது.
போருக்கான வாய்ப்புகள் அதிகரித்தால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு நேரடியாகப் பாதிக்கப்படும். எண்ணெய் விலை உயர்ந்தால், இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு நேரடியாகப் பாதிக்கப்படும், பொருளாதாரம் மந்தமடையும்.
வளைகுடா நாடுகள் மற்றும் மேற்கு ஆசியாவுடனான இந்தியாவின் பொருளாதார உறவுகள் மிகவும் ஆழமானவை. இந்தப் பிராந்தியத்தின் பல நாடுகள், இந்தியாவின் முக்கிய வணிக கூட்டாளிகளாக உள்ளன.
உதாரணமாக, 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தகம் 1.11 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில், 208.48 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வளைகுடா மற்றும் மேற்கு ஆசியாவிலிருந்து வந்தது. அதாவது, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் வளைகுடா மற்றும் மேற்கு ஆசியாவின் பங்களிப்பு 18.17 சதவீதமாகும்.
இவற்றில், 14.28 சதவீதம் ஜிசிசி-யின் ஆறு நாடுகளிலிருந்து வந்தவை. இது இந்தியாவிற்கு வளைகுடா எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், சௌதி அரேபியா நான்காவது இடத்திலும் உள்ளது. ஆனால் இந்த விஷயம் எரிசக்தி என்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை.
வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட 90 லட்சம் இந்தியர்கள் பணிபுரிகின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவுக்கு அனுப்பும் மொத்த பணத்தில், ஜிசிசி-யில் பணிபுரியும் இந்தியர்களின் பங்களிப்பு மட்டுமே கிட்டத்தட்ட 40 சதவீதம் ஆகும்.
இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான போரினால் முழு வளைகுடாவும் பாதிக்கப்படலாம், அத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் நலன்கள் நேரடியாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இரான் மீது டிரம்ப் தடைகளை விதிப்பதற்கு முன்பு, இரான் இந்தியாவின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் வழங்குநராக இருந்தது.
மேற்கு ஆசியாவிலிருந்து எண்ணெய் இந்தியாவிற்குள் வருகிறது, இது இரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது. வர்த்தக வழிகள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்தியாவின் சர்வதேச வர்த்தகம் பாதுகாப்பாக இயங்கும்.
ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் நாடுகளுடன் ஓமன் வளைகுடா, பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல் வழியாகவே இந்தியா வர்த்தகம் செய்கிறது. இரான் முழுமையாக போரில் ஈடுபட்டால், இந்த வர்த்தக வழிகள் தடைபடலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்துக்கான முன்னாள் இந்திய தூதர் நவ்தீப் சூரி கூறுகையில், "வளைகுடா நாடுகளில் 90 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். 50 சதவீதத்திற்கும் அதிகமான எரிசக்தி சார்ந்த இறக்குமதிகள் இந்த பிராந்தியத்திலிருந்தே வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், இந்த பிராந்தியத்தில் அமைதியின்மை ஏற்பட்டால், அது இந்தியாவிற்கு எந்த வகையிலும் நல்லதல்ல." என்கிறார்.
"போருக்கான வாய்ப்புகள் எவ்வளவு அதிகரிக்கும் என்பது, இரான் இஸ்ரேலை மட்டும் குறிவைக்குமா அல்லது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும் குறிவைக்குமா என்பதைப் பொருத்தது. அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் பஹ்ரைனில் ராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது. இரான் அத்தகைய முடிவை எடுத்தால், போருக்கான வாய்ப்பு நிச்சயமாக அதிகரிக்கும். அமெரிக்கா இந்த பிராந்தியத்தில் கத்தாரில் மிகப்பெரிய விமானப்படை தளத்தைக் கொண்டுள்ளது." என்று நவ்தீப் சூரி கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "வெளிப்படையாகவே இந்தப் பிராந்தியத்தை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது. இஸ்ரேல் இந்த பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளின் வான்வெளியைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அந்த நாடுகள், ஒரு போரில் ஈடுபட விரும்பாததால் அவர்கள் யாரும் இஸ்ரேலைத் தடுக்க முயற்சித்திருக்க மாட்டார்கள் அல்லது அதைத் தடுக்கும் திறன் அவர்களிடம் இல்லை.
இதைக் கருத்தில் கொண்டே சௌதி, ஓமன், இராக் அல்லது ஜோர்டான் ஆகிய நாடுகள் இஸ்ரேல் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தடுத்திருக்காது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நலன்களைக் கவனித்துக் கொள்கிறார்கள்" என்கிறார்.
மேலும், "தற்போது போரில் இருந்து விலகி இருப்பது இந்தியாவின் நலனுக்கு உகந்தது. கடினமான சூழ்நிலைகளில், இந்தியாவுக்கு உதவ முன்வருவது இஸ்ரேல்தான். இஸ்ரேலைக் கண்டிக்காமல் இருப்பது இந்தியாவின் நலனுக்கு உகந்தது. இஸ்ரேல் தனது ஆக்ரோஷத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்தியா நிச்சயமாக விரும்பும்" என்று நவ்தீப் சூரி கூறுகிறார்.
"இப்போது வெளிப்படையான போர் தொடங்கிவிட்டது. சாபஹரைப் பொறுத்தவரை, அது ஒரு நீண்ட கால முதலீடு. இன்று நடப்பது சில மாதங்களுக்குப் பிறகு நடக்காமல் போகலாம். இரானுடனான இந்தியாவின் உறவுகள் மிகவும் சிக்கலானவை. இயல்புநிலை திரும்பினால், இரானுடனான வர்த்தகம் பில்லியன்கணக்கான டாலர்கள் மதிப்புடையதாக இருக்கும். இரானில், இந்தியாவிற்கும் ஒரு பெரிய சந்தை கிடைக்கிறது. இரானுடன் நமக்கு நாகரிக உறவுகள் உள்ளன" என்று சூரி கூறுகிறார்.
சதாம் உசேன் காலத்தில் இந்தியா இராக்குடன் நெருக்கமாக இருந்ததாக இரான் நினைத்தது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடனான உறவுகள், அந்நாடுகளில் வசிக்கும் இந்தியத் தொழிலாளர்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தியா அரபு நாடுகளுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளது.
இரானில் இருந்து எண்ணெய் விநியோகம் என்பது ஒருபோதும் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்றவாறு இருக்கவில்லை. இதற்கு முக்கிய காரணங்கள் இஸ்லாமியப் புரட்சி மற்றும் இராக்-இரான் போர்.
இரானுடனான நட்பை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டுசெல்வதில் இந்தியாவும் நீண்ட காலமாகத் தயங்கி வருகிறது. 1991ஆம் ஆண்டு பனிப்போர் முடிந்து சோவியத் யூனியன் சரிந்தபோது, உலகம் ஒரு புதிய திருப்பத்தை எதிர்கொண்டது. அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள் வளர்ந்த போது, இந்தியா இரானை நெருங்குவதை அமெரிக்கா தொடர்ந்து தடுத்தது.
1990ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச ரீதியில் சில காரணங்கள் இருந்தன. 1990 ஆம் ஆண்டு வளைகுடா போர் தொடங்கியது, அது இந்தியாவை நேரடியாகப் பாதித்தது. உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்ததால் இந்தியாவும் பாதிக்கப்பட்டது.
1990-91 ஆம் ஆண்டில், பெட்ரோலிய இறக்குமதி செலவு இரண்டு பில்லியன் டாலர்களிலிருந்து 5.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. எண்ணெய் விலை உயர்வு மற்றும் இறக்குமதி அளவு அதிகரிப்பு காரணமாக இது நடந்தது.
இது இந்தியாவின் வர்த்தக சமநிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. இது தவிர, வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் வருவாயும் மோசமாகப் பாதிக்கப்பட்டதால் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் பணமும் குறைந்தது. அந்த சமயத்தில் இந்தியாவின் அரசியலில் ஒரு நிச்சயமற்ற தன்மை தொடர்ந்து நிலவியது. 1990 மற்றும் 91க்கு இடையில் இந்தியாவில் அரசியல் ஸ்திரமின்மை உச்சத்தை எட்டியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு