கர்ப்பிணி தாய்மார்களுக்கு இலவசம்..! பிரதம மந்திரி சுமன் யோஜனா திட்டம்!
Newstm Tamil June 14, 2025 01:48 PM

இந்தியாவில் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. எனவே, ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கும், புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் உரிய நேரத்தில் போதிய மருத்துவ வசதியும், சுகாதார பராமரிப்பும் எளிதாக கிடைக்க வேண்டும். அதுவே பெண்கள் நல்ல முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவி செய்கிறது. அத்துடன், குழந்தையும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் பிறக்கும்.

இத்தகைய கடுமையான பிரச்சனையை கருத்தில் கொண்டே இந்திய அரசாங்கம் சுரக்ஷித் மாத்ரித்வா ஆஷ்வாசன் சுமன் யோஜனா என்ற சிறப்பு வாய்ந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

நாட்டில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும் பொருட்டும், அவர்களுக்கு சிறந்த முறையில் தரமான மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கும் பொருட்டும் இந்திய அரசாங்கம் அக்டோபர் 10, 2019 அன்று சுரக்ஷித் மாத்ரித்வா ஆஷ்வாசன் சுமன் யோஜனா (Surakshit Matritva Aashwasan Yojana) என்ற மகப்பேறு நலத் திட்டத்தை அறிமுகம் செய்தது.

மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் தேவைப்படும் தாய்மார்களுக்கும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் ஒரு வரம் என்று சொல்லலாம். இந்த திட்டம் பிரதம மந்திரி பெண்கள் பேறுகால பாதுகாப்பு உறுதி திட்டம் அல்லது சுமன் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

சுமன் யோஜனா திட்டத்தின் குறிக்கோள் என்ன?
நாட்டில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதே இத்திட்டத்தில் முதன்மை நோக்கமாக உள்ளது. அத்துடன், மருத்துவ மற்றும் சுகாதார வசதி தேவைப்படும் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ வசதிகளை இலவசமாகவும், தரமாகவும் வழங்க வேண்டும் என்பதே சுமன் திட்டத்தின் மற்றொரு குறிக்கோளாகும்.

சுமன் யோஜனா திட்டத்தின் முக்கியமான நன்மைகள்
இந்த திட்டத்தின் கீழ், அரசு மற்றும் பொது சுகாதார மையங்களில் சாதாரண மற்றும் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக பிரசவம் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் ஒரு பரிசோதனை, பிரசவத்திற்கு முந்தை பரிசோதனைகள் நான்கு மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷித் மாத்ரித்வா அபியான் திட்டத்தின் கீழ் ஒரு பரிசோதனை என மொத்தம் 6 வகையான பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

இது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை கண்காணிக்க உதவுகிறது. மேலும், குழந்தை பிறந்த பிறகு 6 மாதங்களுக்கு தாய் மற்றும் குழந்தைக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும். அத்துடன், புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு டெட்டனஸ்-டிப்தீரியாவுக்கு எதிரான தடுப்பூசி மற்றும் தாய்க்கு இரும்பு மற்றும் ஃபோலிக் அமில சப்ளிமெண்ட்ஸ் ஆகியவையும் இந்தத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கர்ப்பிணிப் பெண்கள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு செல்வதற்கும்; மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு வீட்டிற்கு செல்வதற்கும் இலவசப் போக்குவரத்து வசதி வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், குழந்தையின் பிறப்பை பதிவு செய்யவும் அரசாங்கமே உதவுகிறது. இதன் மூலம் குழந்தை பிறந்த உடனேயே பிறப்புச் சான்றிதழ் எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.

பிரசவத்திற்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன், ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கும் பாதுகாப்பான உடலுறவு, ஓய்வு, குடும்பக் கட்டுபாடு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்படும் ஆபத்து அறிகுறிகள், கர்ப்ப கால பராமரிப்பு, பிரசவத்திற்கு பிறகு பராமரிப்பு, தாய்ப்பாலின் முக்கியத்துவம், குழந்தை பராமரிப்பு, ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

சுமன் யோஜனா திட்டத்தின் தகுதிகள்
அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் புதிதாகப் பிறந்த குழந்தைகளும் (0 முதல் 6 மாதம்) பிரதம மந்திரி சுமன் யோஜனாவின் கீழ் சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர்கள். மேலும், பிரசவத்திற்குப் பிறகு 6 மாதங்கள் வரை பாலூட்டும் தாய்மார்கள் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற தகுதியுடைவர்கள். இருப்பினும், விண்ணப்பிக்கும் கர்ப்பிணி பெண் இந்தியாவில் நிரந்தர வசிப்பவராக இருக்க வேண்டும்.

சுமன் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
இந்த திட்டத்தின் கீழ் சலுகைகளை பெற பயனாளிகள் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  • ஆதார் அட்டை
  • பான் கார்டு
  • வாக்காளர் அடையாள அட்டை
  • ரேஷன் கார்டு
  • வங்கி கணக்கு விவரங்கள்
  • வருமானச் சான்றிதழ்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • மொபைல் எண்
  • சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இருந்து பெண்களின் கர்ப்ப விவரங்கள்

சுமன் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை
பிரதம மந்திரி சுமன் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க, பெண்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, தேவையான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். மருத்துவமனை விவரங்களைச் சரிபார்த்து, திட்டத்தில் இணைப்பார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.