ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதத்தில் 3வது ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ அவர்களின் முதல் ஹீரோ அப்பா தான். குழந்தைகளை தோள் மேல் ஏற்றி உலகத்தை பார்க்க வைக்கும் தகப்பன் அவர்கள் வளரத் தொடங்கியதும் எட்டி நின்று பார்த்தே சந்தோஷப்படுகிறான்.
அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், ஊக்கத்தையும் அருகில் இருந்து கொடுக்கும் பெரும்பாலான அப்பாக்கள் அந்த குழந்தைகள் வாழ்க்கையில் உயரங்களை தொடும் சமயங்களில் தங்களை தள்ளியே நிறுத்திக் கொள்கின்றனர். வருங்கால தலைமுறையை சரியாக உருவாக்குவது என்னுடைய தார் மீக கடமை. இதற்காக எந்த புகழ்ச்சியையோ, கொண்டாட்டத்தையோ வருங்கால சந்ததியிடம் நீயும் எதிர்பார்க்கக் கூடாது என சொல்லாமல் தன்னுடைய பிள்ளைக்கு வாழ்ந்து காட்டுகிற வரம் அப்பாக்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.
சென்ற நூற்றாண்டில் அப்பாக்களுக்கு சொல்லப்பட்ட அனைத்து கோபமான , அழுத்தமான, ரௌத்திரமான, பிம்பங்களையும் உடைத்துள்ளனர் இன்றைய தலைமுறை அப்பாக்கள். அவர்களே குழந்தைகளுக்கு செவிலித்தாயாக, சகோதரனாக, தோழனாக, அனைத்துமாக தோளில் சாய்த்து தாலாட்டி கதை சொல்லும் அப்பாக்களாக மாறியிருப்பது இந்த நூற்றாண்டு குழந்தைகள் வாங்கி வந்த வரம் என்றே சொல்லலாம்.
பால்யங்களிலும், திருமணத்திற்கு பின் குடும்பக் கடமைகளில் தன்னைப் பற்றி யோசிக்க நேரம் இல்லாத அப்பாக்கள் தான் , பிள்ளைகள் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.வளமான வாழ்க்கையில் வளர்ச்சிக்கு வழிகாட்டும் அப்பாக்கள், கடன்பட்ட வாழ்க்கையில் கலக்கம் இல்லாத வாழ்க்கைக்கு வழிகாட்டும் அப்பாக்கள் என எப்படி இருந்தாலும், குடும்பத்தின் ஆணிவேராக இருந்து அம்மாக்கள் பேரன்பை குழந்தைகளிடம் செலுத்தக் கூடிய சூழ்நிலையை உருவாக்குபவர்கள் அப்பாக்கள் தான்.
அம்மாவின் அன்பை ஆறு மாதக் குழந்தையாயிருக்கும் போதிலிருந்தே உணர முடியும். ஆனால் அப்பாவின் அன்பை அந்த குழந்தை, தான் ஒரு காலத்தில் அப்பாவாகி, தன்னுடைய குழந்தையை ஒரு அப்பாவாக கொஞ்சும் போது தான் உணர முடியும். அப்பாக்கள் முதன்முதலாக தூக்கியதையோ, கொஞ்சியதையோ குழந்தைகள் அறிவதில்லை. நிழலாய் வந்து துணை நின்ற அப்பாவின் உழைப்பு தான் இன்றைய அடையாளம் என்பதை குழந்தைகள் தாம் பெற்றோராக மாறும் போது உணர்கிறார்கள். வாழ்வில் எத்தனை இடர்கள் துன்பங்கள் வந்தாலும் குழந்தைகளின் மீது கொண்ட அக்கறையை கொஞ்சமும் குறைத்து கொள்ளாதவர்கள் அப்பாக்கள் தான்.
எப்போதும் நன்றிகளை எதிர்பார்க்காமல் அன்பை கூட கடமையாக செய்யும் இன்றைய தலைமுறை அப்பாக்களுக்கு நமது நன்றியை சிரிப்பலைகளால் சொல்லுவோம்! அதுவே அவர்களுக்கு செலுத்தும் நன்றியாக அமையும். அப்பாக்களின் வலியை உணர்வோம்! அவர்களை கொண்டாடுவோம்!