நாளை முதல் பைக் டாக்சிகளுக்கு தடை... !
Dinamaalai June 15, 2025 05:48 PM

 

ஓலா, ஊபர், ரேபிடோ  நிறுவனங்கள் 'பைக் டாக்சி' சேவையை வழங்கி வருகின்றன. இந்த பைக் டாக்சிகளின்  சேவைக்கு கர்நாடக அரசின் போக்குவரத்துத்துறை தடை விதித்தது. இதையடுத்து அந்நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில்   மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்  பைக் டாக்சிக்கு அரசு விதித்த தடை செல்லுபடியாகும் எனக் கூறியுள்ளது. ஜூன் 15க்கு பிறகு   பைக் டாக்சிகளுக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்றம் ஏற்கனவே  கூறிவிட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர்ராவ், நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசிகிரண்ஷெட்டி, 'கர்நாடகத்தில் 4, 3 சக்கர வாகனங்கள் உரிய அனுமதி பெற்று வாடகை அடிப்படையில் டாக்சி சேவையை வழங்குகின்றன. ஆனால் 2 சக்கர வாகனங்களை வாடகை வாகனங்களாக மாற்றுவது  சாத்தியமில்லை. இத்தகைய பைக் டாக்சிக்கு நாட்டில் 8 மாநிலங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என்றார்.  


மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், 'இந்தியாவின்  பல்வேறு மாநிலங்களில் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் மட்டும் அதற்கு விதிமுறைகளை அரசு வகுக்கவில்லை. 2 சக்கர வாகனங்கள், பெரிய வாகனங்களை விட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடும் குறைவாக இருக்கும். அதனால் 2  சக்கர வாகனங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்தால் போதும். பதிவெண் பலகைகளின் நிறத்தை பசுமை நிறத்திற்கு மாற்றினால் போதும்’ எனக் கூறினார்.  நீதிபதிகள் விசாரணையை ஜூன் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதுகுறித்து மத்திய-மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும்படியும் கூறப்பட்டுள்ளது. 


இதனை தொடர்ந்து நாளை   ஜூன் 16 திங்கட்கிழமை  முதல் கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட உள்ளது. மேலும் கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை பைக் டாக்சிக்கான தடை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.