புனேவின் தலேகானில் உள்ள குண்ட்மாலா அருகே இந்திராயானி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய பாலம், இன்று இடிந்து விழுந்தது. 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன, உள்ளூர் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் குழுக்கள் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தற்போது 15 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
இந்த சம்பவத்தில் சுமார் 15 முதல் 20 பேர் வரை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பாழடைந்த நிலையில் இருந்த பாலம், சிறிது நேரம் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது. இருப்பினும், பலத்த மழை மற்றும் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைக் காண பலர், இந்த ஆற்றுப்பாலத்தில் ஒரே நேரத்தில் கூடியதால் பாலம் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது.
தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் புனேவில் உள்ள இடத்தை அடைந்துள்ளன, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரிகள் குழுக்கள் வருவதற்கு முன்பே, உள்ளூர்வாசிகளும் காவல்துறையினரும் முதலில் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். இதுவரை இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.