பீகார் மாநிலத் தலைநகரான பாட்னாவில், முதல்முறையாக கட்டப்பட்ட இரட்டை அடுக்கு மேம்பாலத்தை ஜூன் 11ம் தேதி முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் ரூ.422 கோடி செலவில் கட்டப்பட்டு, முக்கிய பகுதிகளை ஒருங்கிணைக்கும் முக்கிய போக்குவரத்து வழியாக அமைந்துள்ளது. இதனையடுத்து, இந்த மேம்பாலம் பாதுகாப்பு குறைவால் சர்ச்சைக்கு இடமளித்துள்ளது.சமூக வலைதளங்களில் தற்போது பரவும் ஒரு வீடியோவில், 4-5 சிறுவர்கள் மேம்பாலத்தில் இருந்து நட்டுகள் மற்றும் போல்டுகளை கழற்றி எடுக்கின்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
அந்த வீடியோவில், அவர்கள் பணி செய்யும் போதே அருகில் உள்ள ஒருவர் அதை பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த குழந்தைகளை ஒருவர் எச்சரித்தவுடன் அவர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். குழந்தைகளின் முகங்கள் தெளிவாக தெரியவில்லை என்றாலும், மேம்பாலத்தில் ஏற்பட்ட சேதம் வீடியோவில் தெளிவாக காட்சி அளிக்கிறது.
இச்சம்பவம் மேம்பாலங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது. பொது சொத்துக்களை பாதுகாக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் திறந்து விடப்பட்டமைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. முக்கியமான கட்டுமானத் திட்டங்களில் சிசிடிவி கண்காணிப்பு, பாதுகாப்பு காவலர்கள், மற்றும் அறிவிப்பு பலகைகள் போன்றவை அவசியமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.