போன தலைமுறை வரை 60 வயதிற்கு மேல் தொடங்கிய உடல் உபாதைகள் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக தற்போது மிக மிக இளம் வயதிலேயே வந்து விடுகின்றன. அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநிலம் பிஜனூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் சர்பரா சகமது. 26 வயதான இவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது சிகிச்சையின் நடுவே மின்சாரம் தடைபட்டதால் அகமது பரிதாபமாக உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது மகன் இறந்ததற்கு மின்சாரம் பாதியிலேயே நின்றது தான் காரணம் என அகமதுவின் தாய் குற்றச்சாட்டை கூறியுள்ளார். மின்சாரம் போனதால் என் மகன் ரத்தம் பாதியிலேயே கருவிக்குள் சிக்கிக் கொண்டது.அப்போது மருத்துவப் பணியாளர்களிடம் ஜெனரேட்டரை இயக்க சொல்லி கெஞ்சினேன். யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. எனது மகன் என் கண் முன்னாலேயே துடிதுடித்து உயிரிழந்துவிட்டான் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நேரத்தில் பிஜ்னோர் மருத்துவமனையில் ஜெனரேட்டரில் டீசல் இல்லாதது உறுதியானது.
மருத்துவமனைக்கான ஒப்பந்த நிறுவனம் டீசல் வழங்காததால் சிகிச்சை தொடர முடியாது நிலை ஏற்பட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ நிபுணர்கள் டயாலிசிஸ் கருவியில் அதிக ரத்தம் தேங்க வாய்ப்பில்லை என்றாலும் கூட திடீரென மின்தடை ஏற்படுவது நோயாளிகளின் நிலைமையை மோசமாக்கும் என தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.