டாஸ்மாக் விசாரணைக்கு பிறகு முதலமைச்சரின் குடும்பத்தினரே சிறைக்குச் செல்லக்கூடும் என பாரதிய ஜனதா கட்சி தமிழக மாநில பொதுச் செயலாளர் கருப்பு. முருகானந்தம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் வி.கை காட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அரியலூர் மாவட்ட கூட்டம் மாவட்ட தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள முருகர் மாநாட்டிற்கு செல்வது குறித்து பாரதிய ஜனதா கட்சி தமிழக மாநில பொதுச் செயலாளர் கருப்பு.முருகானந்தம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் கருப்பு. முருகானந்தம், “திமுக தனியாக தேர்தலை சந்தித்தால், அனைத்துக் கட்சிகளும் தேர்தலை தனியாக சந்திப்பது குறித்து சிந்திக்கலாம். திமுக தமிழகத்தில் பல கட்சிகளை இணைத்துக் கொண்டு தாங்கள் ஒரு பெரிய கூட்டணி கட்சி என்று கூறும் பொழுது, அதற்கு இணையாக கூட்டணியை உருவாக்கினால்தான் அவர்களை தோற்கடிக்க முடியும் என்கிற பொழுது, நாங்கள் தனித்து நின்று திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு நாங்கள் வாய்ப்பளிக்க முடியாது. எங்களுடைய ஒரே நோக்கம் திமுக ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே. மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா 2026 தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற இயக்கமே இருக்காது என்று கூறியுள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவர்கள் செய்துள்ள ஊழலுக்காக நடவடிக்கை எடுக்கும் பொழுது, இந்த இயக்கமே இருக்காது.
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக பாஜக கூறி என்று நான்கு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காரணம் நீதிமன்றம் சில இடைக்கால தடை விதித்துள்ளது. அந்த இடைக்கால கால அவகாசம் முடிய உள்ளது. உறுதியாக நீதிமன்றம் விசாரணைக்கு அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விசாரணை நடைபெறும் பொழுது திராவிட கழகத்தைச் சேர்ந்த முதலமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இவர்களுக்கு பயம் இல்லை என்றால் இவர்கள் ஏன் நீதிமன்றத்தை நாடினார்கள். வழக்கை சந்திக்க தைரியம் இருந்தால், இவர்கள் மேல் குற்றம் இல்லை என்றால், நீதிமன்றத்தை நாடி இருக்க கூடாது. நீதிமன்றத்தை நாடி இடைக்கால தீர்ப்புகளை பெறுகின்றனர். விசாரணை தீர்ப்புக்குப் பிறகு யார் யார் சிறைக்கு செல்வார்கள் என்பது தெரியும். பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதுதான். எனவே சீமானின் போராட்டத்தை ஆதரிக்கின்றோம். மக்களுக்கான நன்மைக்கு திமுக போராட்டம் நடத்தினால் கூட அதையும் நாங்கள் ஆதரிப்போம்” என்று கூறினார்.