Iran: நேரடி ஒளிபரப்பின்போது நடந்த ஏவுகணைத் தாக்குதல்; அதிர்ந்து தீப்பற்றிய தொலைக்காட்சி ஸ்டுடியோ!
Vikatan June 17, 2025 02:48 PM

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஈரானும் - அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடந்தி வந்தது. ஈரான் அதன் அணுசக்தி திறனை வளர்ப்பதைத் தடுப்பதே நோக்கம் என அறிவித்த இஸ்ரேல், ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதனால் இரு நாடுகளுக்கு மத்தியில் இருந்த பகைமை தீவிரமடைந்து போர் தொடங்கியிருக்கிறது.

Iran State TV Studio

இந்த நிலையில், ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவரான அயதுல்லா அலி கமேனியை கொல்லும்வரை இந்தப் போர் முடியாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலின் இந்த முடிவை கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையில், இருநாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்திவருகின்றன.

sahar imami

இதுபோன்ற ஒரு தாக்குதலில், இஸ்ரேலிய ஏவுகணை ஈரானிய அரசின் செய்தி ஒளிபரப்பு நிலையத்தைத் தாக்கியது. ஈரான் அரசின் தொலைக்காட்சி ஸ்டுடியோவின் வளாகத்தை ஏவுகணை தாக்குவதைக் காட்டும் காட்சிகள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. நிகழ்ச்சிக்கு நடுவில் இருந்த தொகுப்பாளர் சஹார் இமாமி அந்த இடத்திலிருந்து வெளியேறினார். ஏவுகணையின் தாக்கத்தால் முழு ஸ்டுடியோவும் அதிர்ந்தது.

ஈரான் அளித்திருக்கும் தகவலின்படி தொகுப்பாளர் சஹார் இமாமி உள்ளிட்ட ஸ்டுடியோவில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் காயமின்றியும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிறிது நேரத்தில் அவர் வேறு தொடர்பு வழியாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து பொதுமக்கள் வெளியேறத் தொடங்கியிருக்கின்றனர். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ``தெஹ்ரானில் வசிப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் இல்லை என்றாலும், தெஹ்ரானில் வசிப்பவர்கள் சர்வாதிகாரத்தின் விலையைச் செலுத்த வேண்டும். தெஹ்ரானில் உள்ள பாதுகாப்பு உள்கட்டமைப்பு பகுதிகளிலிருந்து வீடுகளை காலி செய்ய வேண்டும். இஸ்ரேலில் வசிப்பவர்களை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.