கடனுக்காக பெண்ணை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்; கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு- என்ன நடந்தது?
Vikatan June 17, 2025 07:48 PM

ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்தது குறித்து முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சித்தூர் மாவட்டம், நாராயணபுரத்தில் கடன் திருப்பிச் செலுத்தாதது தொடர்பான தகராறில், ஒரு பெண்ணை மரத்தில் கட்டிவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திம்மராயப்பா என்பவரின் மனைவி சிரிஷா நேற்று தனது குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழ்களை (TC) பள்ளியிலிருந்து வாங்குவதற்காக பெங்களூருவிலிருந்து திரும்பி வந்தபோது, அவரது கணவர் கடன் வாங்கியது குறித்து உள்ளூர்வாசிகள் அவரிடம் புகார் அளித்திருக்கின்றனர்.

அதன்பின்னர் சிரிஷாவை உள்ளூர்வாசிகள் ஒரு மரத்தில் கட்டி வைத்ததாகவும், பணத்தை திருப்பித் தர அவரது கணவரை அழைக்குமாறு கூறியதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர்வாசிகளின் நடவடிக்கையை தொடர்ந்து, போலீசார் வந்து சிரிஷாவை மீட்டுள்ளனர். அவரது புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைச் செயல்களை பொறுத்துக்கொள்ளக் கூடாது என்றும், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற தனது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும கிராமங்களில் சட்ட விழிப்புணர்வு இயக்கங்களை ஏற்பாடு செய்யுமாறு காவல்துறையினருக்கு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.