சேலம் மாவட்டம் ஆத்தூர் தாண்டவராயபுரம் மற்றும் மேட்டூர் ஆகிய இரண்டு இடங்களில் மினி ஸ்டேடியம் அமைக்க விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி வைத்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடு அருகே சேர்வராயன் மலைகளை ஒட்டி காட்டுவேப்பிலைப்பட்டியில் 16 ஏக்கரில் மெகா கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இது சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் எளிதாக செல்லும் வசதிகள் இருக்கின்றன. இதில் ரஞ்சி ட்ரோபி, தமிழ்நாடு பிரீமியர் லீக் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றுள்ளன.
விரைவில் ஐபிஎல் போட்டிகள் நடத்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தாண்டி ஒவ்வொரு தொகுதியாக மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதில் ஆத்தூர், மேட்டூர் ஆகிய தொகுதிகளில் இடம் தேர்வு செய்து அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. எஞ்சியுள்ள கெங்கவல்லி, ஏற்காடு, ஒமலூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய தொகுதிகள் எஞ்சியிருக்கின்றன.
இவற்றிலும் மினி ஸ்டேடியம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் ஏற்காடு, கெங்கவல்லி, தலைவாசல், சங்ககிரி ஆகிய இடங்களில் புதிதாக மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் கெங்கவல்லி, தலைவாசல் ஆகியவை இரண்டும் ஒரே தொகுதியின் கீழ் வருகின்றன.
இரண்டுக்கும் இடையில் 25 கிலோமீட்டர் இடைவெளி மட்டுமே இருக்கின்றன. எனவே இரண்டில் ஏதாவது ஒன்றில் சரியான இடம் தேர்வு செய்யப்பட்டு மினி ஸ்டேடியம் அமைக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. எஞ்சியுள்ள ஏற்காடு, சங்ககிரி ஆகியவை தனித்தனி தொகுதிகள் என்பதால் எந்தவித சிக்கலும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. இதுதொடர்பாக விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பயன்பாட்டிற்கு வரும் போது சேலத்தில் இருந்து பலரும் விளையாட்டில் ஆர்வம் காட்ட தொடங்குவர் என்கின்றனர்.