சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதே கதி தான், ஈரான் தலைவருக்கும்... இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
Dinamaalai June 18, 2025 04:48 PM


இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. ஈரானை விட்டு வெளியேற இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் தன் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.   இதில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகம் இருக்கும் இடமும் ஒன்று என வீடியோவை வெளியிட்டு ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.


இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொலை செய்ய போவதாக மிரட்டினார். கமேனி கொல்லப்பட்ட பின்னரே இந்தப் போர் நிற்கும் எனக் கூறியிருந்தார். இதனையடுத்து கமேனியைக் கொல்ல இஸ்ரேல் ஒரு பெரிய திட்டத்தை போட்டதாக தெரிகிறது . கடைசி நேரத்தில், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் இஸ்ரேலின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. இதையடுத்து, ஈராக்கின் சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதே கதி தான் ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கும் ஏற்படும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 
சதாம் உசேனுக்கு  மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனைக்கு விதிக்கப்பட்டது.  அதுமட்டுமின்றி, சதாமின் ஒன்றுவிட்ட சகோதரர் (உளவுத்துறை அதிகாரி) மற்றும் ஈராக்கின் முன்னாள் தலைமை நீதிபதி ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.  2006 ல் ஈராக் நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதி செய்த சில நாட்களுக்குப் பிறகு, சதாம் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.