ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் பேத்திகள் உள்ளிட்ட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் செல்லம்மாள்(65) மற்றும் அவரது மகள் காளீஸ்வரி (45). காளீஸ்வரிக்கும் பவித்ரா(28) என்கிற மகள் உள்ளார். இந்நிலையில் காளீஸ்வரி கடந்த 9 வருடங்களுக்கு முன்பு தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். பவித்ராவும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுடன் கணவர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அண்மையில் பிரிந்துள்ளனர்.
இதனால் லித்திக்ஸா (7), தீப்தி (5) ஆகிய தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்த பவித்ரா, கடந்த ஒரு மாதமாக சின்ன குழிப்பட்டியில் தாய் காளீஸ்வரியின் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளபட்டியைச் சேர்ந்த ஒருவருடன் பவித்ராக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நேற்று (ஜூன் 17) மாலை 6 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா அந்த நபருடன் சென்று விட்டார்.
இதனால் அவமானம் அடைந்த பாட்டி செல்லம்மாளும், தாய் காளீஸ்வரியும் பேத்திகளான இரண்டு சிறுமிகளையும் கொன்றுவிட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 4 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.