சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் நடத்தப்பட்டு வந்த அகழாய்வின் அறிக்கைகள் சமீபத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கீழடி தொடர்பாக ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தாக்கல் செய்திருந்த அந்த அறிக்கையில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறிவிட்டது. மத்திய பாஜக அரசு திருத்தம் செய்ய கோரியிருந்தது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா தற்போது நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய தொல்லியல் துறை பிறப்பித்துள்ளது.
பண்டைய கால ஆய்வு மற்றும் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராக அமர்நாத் ராமகிருஷ்ணா இருந்த நிலையில், இனி நொய்டாவின் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராக பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத்தின் வசம் இருந்த பண்டைய கால ஆய்வுத் துறை, ஹெச்.ஏ. நாயக்கிடம் வழங்கப்பட்டுள்ளது. ஹெச்.ஏ. நாயக் ஏற்கனவே அகழாய்வின் இயக்குநராக இருப்பது குறிப்பிடத்தக்கது