7 ஆண்டுகளாக சொன்ன சொல் காப்பாற்றும் சிவகார்த்திகேயன்.. குவியும் பாராட்டுகள்..!!
Top Tamil News June 18, 2025 07:48 PM

மறைந்த நெல் ஜெயராமனின் குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் 7 ஆண்டுகளாக செய்து வரும் உதவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  

பாரம்பரிய நெல் ரங்களை மீட்பதில் முக்கிய பங்காற்றியவர் நெல் ஜெயராமன். 12 ஆண்டுகள் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல் ரக உற்பத்தியை பெருக்கி வந்தார். 2 ஆண்டுகள் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த அவர்,  கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.  முன்னதாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி உள்ளிட்ட பலர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அப்போது ஜெயராமனின் மருத்துவச் செலவுகளை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றிருந்தார். அவர் மறைந்த பின்னர் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும் செலவுகளையும் ஏற்றிருந்த அவர், ஜெயராமனின் மகன் கல்விச் செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு தற்போதுவரை 7 ஆண்டுகளாக ஜெயராமனனி மகன் கல்விக் கட்டணங்களை சிவகார்த்திகேயன் செலுத்தி வருவதாக ரா. சரவணன் என்பவர் தெரிவித்துள்ளார்.  

 இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சரவணன், “அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள். அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டிச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள். ஆனால், தம்பி சிவகார்த்திகேயன் சொன்ன சொல் தவறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவைக் கட்டி வருகிறார். பணம் கட்டுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் தேர்வு நேரத்தில் போன் செய்து விசாரிப்பார். அன்பும் அக்கறையுமாகப் பேசுவார். 

இந்த வருடம் சீனிவாசன், கல்லூரி படிப்பில் கால் வைக்கிறார். எந்தக் கல்லூரி, என்ன படிப்பு என்கிற விவரங்களை விசாரித்து, கோவை கற்பகம் கல்லூரியில் பேசி அவரைச் சேர்த்திருக்கிறார் சிவா. நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார் சிவகார்த்திகேயன். அப்பலோ மருத்துவமனையில் மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், பாண்டிச்சேரி படப்பிடிப்பில் இருந்து ஓடிவந்து, நெல் ஜெயராமனின் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நானிருக்கிறேன் அண்ணன்’ என சிவகார்த்திகேயன் நம்பிக்கை சொன்ன காட்சி, அப்படியே நெஞ்சுக்குள் விரிகிறது. நம்பிக்கையாகவே நின்று காட்டும் தம்பிக்கு நன்றி…” என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 



 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.