`பரோலில் திருமணம்; குழந்தை பெற சிறையில் இருந்து விந்து..' கேங்ஸ்டர் தம்பதியின் காதல் கதை
Vikatan June 18, 2025 09:48 PM

டெல்லியில் பெண் தாதாவாக இருப்பவர் அனுராதா செளதரி. இவர் எப்போதும் பாதுகாவலர்கள் துணையோடுதான் வலம் வருவார். இவர் மீது கொலை, கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல் என ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

ஆனால் இந்த வழக்குகளில் அனுராதா ஜாமீன் பெற்று வெளியில் வந்துவிட்டார். ஜாமீனில் வெளியில் வந்த பிறகு டெல்லியில் மற்றொரு கேங்க்ஸ்டராக இருக்கும் சந்தீப் என்ற காலா ஜாதேடி என்பவரை காதலித்து வந்தார்.

சந்தீப், அனுராதா, ஆனந்த்பால்

சந்தீப் இப்போது பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறான். ஆனாலும் அவனை திருமணம் செய்யவேண்டும் என்று முடிவு செய்து கடந்த மார்ச் மாதம் அனுராதா திருமணம் செய்து கொண்டார். இதற்காக கோர்ட் சந்தீப்பிற்கு ஒரு நாள் பரோல் வழங்கியது.

இத்திருமணத்திற்கு டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் போலீஸார் பாதுகாப்பு கொடுத்திருந்தனர். இத்திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து திருமண வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை.

இதனால் அனுராதாவால் குழந்தையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அனுராதாவிற்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விருப்பமாக இருந்தது. இதையடுத்து செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள அனுராதா முடிவு செய்தார். இதற்காக விந்து வழங்க தனக்கு ஒரு நாள் பரோல் வழங்கவேண்டும் என்று கோரி சந்தீப் டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

அவர்களுக்கு திருமணம் செய்ய அனுமதி கொடுத்த அதே நீதிமன்றம் சந்தீப் விந்து கொடுக்க சம்மதம் தெரிவித்து அனுமதி வழங்கியது. ஆனால் பரோல் வழங்க அனுமதி கொடுக்க மறுத்த கோர்ட் சிறையில் இருந்தபடி விந்து கொடுக்கலாம் என்று தெரிவித்தது. இதையடுத்து சந்தீப் தனது மனைவி குழந்தை பெற்றுக்கொள்ள சிறையில் இருந்து விந்து அனுப்பி இருக்கிறார். அனுராதா குருகிராமில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள சிகிச்சை எடுத்து வருகிறார்.

Lady Don Anuradha Chaudhary எம்.பி.ஏ பட்டதாரி டு லேடி டான்

பெண் தாதாவான அனுராதா ஒரு நேரத்தில் பங்குச்சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவரான அனுராதா 20 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி.ஏ.படித்தபோது தீபக் என்பவரை காதலித்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி தீபக்கை திருமணமும் செய்து கொண்டார்.

இருவரும் சேர்ந்து பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அனுராதா பெயரில் போலி கணக்கு திறந்து அவரது பணத்தை சிலர் மோசடி செய்தனர். இது குறித்து அனுராதா ஹரியானா போலீஸில் புகார் செய்தபோது போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த மோசடியால் அனுராதா கடன் தொல்லைக்கு ஆளானார். இக்கடன் தொல்லையில் இருந்து விடுபட முடியாமல் இருந்தபோது மோசடி மற்றும் கிரிமினல் வேலைகளில் அனுராதா ஈடுபட ஆரம்பித்தார்.

அனுராதாவிற்கு ஆனந்த்பால் சிங் என்ற கேங்க்ஸ்டரின் அறிமுகம் கிடைத்தது. அவனுடன் சேர்ந்து கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அனுராதா தனக்கு தெரிந்த ஆங்கிலத்தை ஆனந்த்பாலுக்கு கற்றுக்கொடுத்தார். ஆனால் துரதிஷ்டவசமாக 2017-ம் ஆண்டு ஆனந்த்பால் படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்த சந்தீப் என்ற காலா ஜாதேடியுடன் அனுராதா சேர்ந்தார். 2020ம் ஆண்டு டெல்லியில் மிகவும் தேடப்படும் கிரிமினல்கள் பட்டியலில் இருவரும் இடம் பெற்று இருந்தனர். அதன் மூலம் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அதுவே இருவருக்கும் இடையே காதலாக மாறியது.

Female Dada Anuradha Chowdhury

ஆனால் சந்தீப் 2021-ம் ஆண்டில் இருந்து சிறையில் இருந்து வருகிறான். சிறையில் இருந்த அனுராதா ஜாமீனில் வந்தார். ஜாமீனில் வந்த பிறகும் சந்தீப்புடன் சேர்ந்துகொண்டு அவரது கூட்டத்தை வழிநடத்தி வருகிறார்.

அவர்களது காதல் தீவிரம் அடைந்ததால் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அனுராதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து நடிகை கங்கனா ரனாவத் `ரிவால்வார் ராணி' என்ற படத்தில் நடித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.