கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக பல மாதங்களாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கும் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி , மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளி மாவட்டங்களில் பணிபுரியும் நபர்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பாக விட்டு செல்வதற்கு நாகர்கோவில் மாநகராட்சி மூலம் பேருந்து நிலையத்தில் இரு வாகன காப்பகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இருந்த போதிலும் வாகன காப்பகங்களில் பாதுகாப்பாக வாகனங்களை தினமும் கட்டணம் செலுத்தி கொண்டு நிறுத்துவதற்கு சிரமப்பட்டு சாலையோரம் ஆங்காங்கே விட்டுவிட்டு செல்கின்றனர்,
சில வாகனங்கள் பல மாதங்களாக சாலை ஓரம் அதே இடத்தில் அனாதையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சாலையோரம் ஆங்காங்கே இறுக்கி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுடன் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களும் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு அப்படியே விட்டுவிட்டு சென்று விடுகின்றனர் இதனால் பல்வேறு வாகன திருட்டுகளும் தினம் தினம் அரங்கேறி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த குமரி மாவட்ட காவல்துறை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கும் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்,
அதுபோன்று யாரும் உரிமை கோர முன் வராத வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தி ஆங்காங்கே (No Parking) அறிவிப்பு பலகைகளை நிறுவுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் மாவட்ட காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் போக்குவரத்து காவல்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.