எழுத்தாளர்கள் லட்சுமிஹர், விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய அகாடமி விருது... முதல்வர், தலைவர்கள் வாழ்த்து!
Dinamaalai June 19, 2025 06:48 PM

தமிழில், சாகித்ய அகாடெமி விருதுக்கு தேர்வான எழுத்தாளர்கள் விஷ்ணுபுரம் சரவணன், லட்சுமிஹர் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், சக எழுத்தாளர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் 'ஒற்றைச் சிறகு ஓவியா' நூலுக்காக சாகித்ய அகாடெமியின் பால சாகித்ய புரஸ்கார் பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகள்.

ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் என தமிழக பள்ளிக்கல்வித் துறையின் முன்னெடுப்புகளிலும் திறம்படப் பங்காற்றி வரும் விஷ்ணுபுரம் சரவணன், இந்த விருதுக்குத் தேர்வாகி இருப்பது கூடுதல் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

அதேபோல, ஆழமான தம் எழுத்துகளுக்கான அங்கீகாரமாகக் 'கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்' சிறுகதைத் தொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருது பெறத் தேர்வாகி இருக்கும் லட்சுமிஹருக்கும் எனது பாராட்டுகள்.

விருது பெறும் இரு இளம் படைப்பாளிகளும் மென்மேலும் தமிழைச் செழுமைப்படுத்தும் ஆக்கங்களை தொடர்ந்து அளிக்க வேண்டும் என வாசிப்பை பெரும் இயக்கமாக முன்னெடுத்து வரும் நமது திமுக அரசு சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.