எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இனப்படுகொலை பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன
ஆஷ்விட்ச்-பிர்கெனாவில் இருந்த நாஜி வதை முகாம் 1945 ஜனவரி 27ஆம் நாளன்று சோவியத் துருப்புகளால் விடுவிக்கப்பட்டது. அந்த முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் யூத பெண்ணான அனிதா லாஸ்கரும் ஒருவர்.
அந்த முகாமில் இருந்த இசைக்குழுவுக்கு செல்லோ வாசிப்பவர் ஒருவர் தேவைப்பட்டுள்ளார். அனிதாவுக்கு அந்த இசைக்கருவியில் புலமை இருந்த ஒரே காரணத்தால் வதைமுகாமில் அவர் உயிர் பிழைத்துள்ளார்.
அவருக்குத் தற்போது 99 வயதாகிறது. ஆஷ்விட்ஸின் பெண்கள் இசைக்குழுவில் எஞ்சியிருக்கும் கடைசி நபர் அனிதா லாஸ்கர்-வால்ஃபிஷ் மட்டுமே.
முகாமில் இருந்து அவர் தனது 19 வயதில் விடுதலையானார். அதற்குப் பிறகு, 1945 ஏப்ரல் 15ஆம் தேதி பிபிசி அவரிடம் பேட்டி எடுத்தது. அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் அனிதா லாஸ்கர் பெர்கன்-பெல்சன் மரண முகாமுக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அனிதா லாஸ்கருடனான பிபிசியின் நேர்காணல் ஜெர்மன் மொழியில் இருந்தது. "முதலில், ஆஷ்விட்ஸ் பற்றி சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். உயிர் பிழைத்த சிலர் அங்கு நடந்தவற்றைச் சொன்னால், உலகம் அதை நம்பாது என்று பயப்படுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
'சாதாரணமாகச் சொன்னது வாழ்க்கையையே மாற்றியது'"வாகனங்களில் நாங்கள் வந்து இறங்கியபோது ஒரு மருத்துவரும் ஒரு தளபதியும் சாய்வான பாதையில் நின்றனர், அனைவரையும் வரிசையாக நிற்க வைத்துப் பிரித்தனர். புதிதாக முகாமுக்கு வந்தவர்களின் வயது மற்றும் சுகாதார நிலை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அந்த முகாமுக்கு வந்த புதியவர்கள், தங்கள் நோய்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்கள். அதாவது, நோய் இருப்பதாகத் தெரிவித்தவர்கள், தங்கள் மரண தண்டனைக்குத் தங்கள் வாயாலேயே ஒப்புதல் அளித்துவிட்டனர் என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக, குழந்தைகளும் முதியோரும் குறிவைக்கப்பட்டனர்.
அங்கு வந்த புதியவர்களை வலது, இடது என இருபுறமாகப் பிரித்து அனுப்பினார்கள். வலதுபுறம் அனுப்பப்படுவோருக்கு வாழ வாய்ப்பு உண்டு, இடது புறமாக அனுப்பப்படுவோர் வதை முகாம்களில் இருந்த தகன மேடைகளின் (cremation ovens) புகைபோக்கிகளை நோக்கி அனுப்பப்பட்டார்கள்."
ஆஷ்விட்ஸ் முகாமில், சாய்வுப் பாதை என்று அழைக்கப்படும் தளத்துக்கு அனிதா லாஸ்கர் வந்தபோது, செல்லோ வாசிக்கத் தெரியும் என்று சாதாரணமாகச் சொன்ன வார்த்தை, அவரது வாழ்வையே மாற்றும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. "மிகவும் பயங்கரமான விஷயங்கள் நடத்தப்படும்போது, இசை இசைக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
அன்று ஜெர்மன் மொழியில் பேட்டியளித்த அனிதா லாஸ்கர், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 50 ஆண்டுகளாக பொதுவெளியில் தனது தாய்மொழியைப் பேசவில்லை. அவரது சொந்த ஊரான பிரெஸ்லாவ் ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்தது. இப்போது வ்ரோக்லாவ் என்று அழைக்கப்படும் அந்த நகரம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போலந்தின் ஒரு பகுதியாகிவிட்டது.
அனிதா லாஸ்கரின் தாய் ஈடித் ஒரு திறமையான வயலின் கலைஞர், அவரது தந்தை அல்ஃபோன்ஸ் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர். இந்தத் தம்பதியின் மூன்று மகள்களில் இளையவர் அனிதா லாஸ்கர். இசை உள்படப் பல்வேறு கலைகளை ஊக்குவிக்கும் குடும்பத்தில் பிறந்த அவருக்கு, செல்லிஸ்ட் (செல்லோ இசைக்கருவியை வாசிக்கும் கலைஞர்) ஆக வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. ஆனால், அவரது மகிழ்ச்சியான வாழ்க்கையைக் காலம் புரட்டிப்போட்டது.
கடந்த 1996இல் பிபிசியின் ஒரு தொலைக்காட்சி ஆவணப்படத்தில் பேசிய அனிதா லாஸ்கர் தனது வாழ்க்கையை நினைவு கூர்ந்தார்: "நாங்கள் சாதாரண ஜெர்மன்-யூத கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சிறிய தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். திடீரென யூத எதிர்ப்பு நிலை உருவானது. 'இதெல்லாம் என்ன?' என்று நினைத்தேன்."
சுமார் 1938 வாக்கில், நாஜி ஜெர்மனியில் யூத எதிர்ப்பு நிலை அதிகமானது. பிரெஸ்லாவில் செல்லோ இசைக் கருவியை யூதக் குழந்தைக்குக் கற்பிக்கும் ஒரு செல்லிஸ்ட் ஆசிரியரை லாஸ்கரின் பெற்றோரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அனிதா லாஸ்கர் பெர்லினுக்கு படிக்க அனுப்பப்பட்டார்.
ஆனால் நிலைமை மாறி, கொலையும் வன்முறையுமான சூழல் தோன்றிய நிலையில், ஓர் இரவு நேரத்தில் அனிதா லாஸ்கர் தனது பெற்றோரிடம் சென்று சேர்ந்தார். கிறிஸ்டல்நாக்ட் என்று அறியப்படும் 1938 நவம்பர் 9ஆம் நாளன்று இரவில் வீடுகள், வணிக வளாகங்கள், தொழுகைக் கூடங்கள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. யூத மக்கள் மீதான துன்புறுத்தல் வன்முறையாக உருவெடுத்தது.
பெர்லினில் இருந்து தனது குடும்பத்தினரிடம் திரும்பி வந்த அனிதா லாஸ்கரின் பெற்றோர், "தங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத" கல்வி மற்றும் கலாசாரத்தை, தங்கள் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கற்பித்து வந்தனர்.
குழந்தைகளைக் காப்பாற்றும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிண்டர்டிரான்ஸ்போர்டில் (kindertransport), அதாவது குழந்தைகள் மீட்பு நடவடிக்கையில், அனிதாவின் மூத்த சகோதரி மரியான் 1939இல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார்.
இரண்டாம் உலகப் போருக்கு சற்று முன்னதாக ஆயிரக்கணக்கான குழந்தைகளை பிரிட்டனுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது.
பின்னர் 1942 வாக்கில், "உலகம் துண்டு துண்டாகப் பிரிந்து கொண்டிருந்த நேரத்திலும்" அனிதாவின் தந்தை அவரையும் அவரது சகோதரி ரெனேட்டையும் ஃப்ரீட்ரிக் ஷில்லரின் சோக நாடகமான டான் கார்லோஸ் போன்ற அதிநவீன படைப்புகளைப் பற்றி விவாதிக்க வைத்துக் கொண்டிருந்தார். இருப்பினும், "என்ன நடக்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது" என்று அனிதா நினைவு கூர்ந்தார்.
நரகத்துக்கு வந்து சேர்ந்த சந்தர்ப்பம்கடந்த 1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 24 மணிநேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேருமாறு அவரது பெற்றோருக்கு ஒரு கொடூரமான உத்தரவு வந்தது.
"நாங்கள் பிரெஸ்லாவ் வழியாக நடந்து சென்றோம். என் பெற்றோர் மட்டுமல்ல, பெரிய அளவிலான மக்கள் கூட்டம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பிறகு விடைபெற்றோம். அதுதான் எனது பெற்றோரைப் பார்த்த கடைசி நாள். அன்று என் பெற்றோர் எவ்வளவு வேதனைகளை அனுபவித்திருப்பார்கள் என்பதை, நான் தாயான போதுதான் புரிந்துகொண்டேன்."
அனிதாவும் ரெனேட்டும் யூதர்களுக்கான ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் நாஜி ஜெர்மனியில் இருந்து தப்பித்துச் செல்லத் திட்டம் தீட்டினார்கள். ஆக்கிரமிக்கப்படாத பிரான்ஸுக்கு வீடு திரும்பும் பெண்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டு, போலி ஆவணங்களுடன் இரண்டு நண்பர்களோடு பிரெஸ்லாவ் ரயில் நிலையத்திற்குப் புறப்பட்டனர். ஆனால், அவர்கள் போட்ட திட்டம் தோல்வியடைந்தது, அவர்கள் நாஜி ரகசிய போலீஸ் படையான கெஸ்டபோ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
போலி ஆவணங்களைத் தயாரித்தல், எதிரிக்கு உதவுதல், தப்பிக்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளில் அனிதா லாஸ்கர் சுமார் 18 மாதங்கள் சிறையில் இருந்தார். குறைந்தபட்சம் அங்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருந்ததாக அவர் சொல்கிறார்.
"சிறைச்சாலை வசிப்பதற்கு இனிமையான இடம் இல்லை என்றாலும், அது ஒரு வதை முகாம் அல்ல. சிறைச்சாலையில் யாரும் உங்களைக் கொல்வதில்லை," என்று அவர் கூறினார்.
கடந்த 1943ஆம் ஆண்டில், பிரெஸ்லாவ் சிறையில் கூட்ட நெரிசல் அதிகமானதால், அங்கிருந்த யூதர்கள் அனைவரும் வதை முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். அனிதா ரயில் மூலம் ஆஷ்விட்ஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவரது சகோதரி ரெனேட் அங்கு அனுப்பப்பட்டார்.
ஓர் இரவு நேரத்தில் முகாமுக்கு சென்று சேர்ந்தபோது அனிதா லாஸ்கர் ஒரு பயங்கரமான காட்சியைக் கண்டார்: "மிகவும் சத்தமாகவும் முற்றிலும் குழப்பமாகவும் இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. எங்கே இருக்கிறோம் என்று தெரியாது. நாய்களின் குரைப்புச் சத்தம், மக்களின் அலறல் சத்தம், ஒரு பயங்கரமான வாசனை... உண்மையில் நரகத்துக்குதான் வந்துவிட்டோம் எனத் தோன்றியது."
முகாமுக்கு அனிதா வந்தவுடன், அவருக்கு பச்சை குத்தி மொட்டையடித்தனர். போரைப் பற்றிய செய்திகளை அறிய அங்கிருந்த கைதிகள் ஆவலுடன் இருந்தனர்.
"நான் நீண்ட காலமாக சிறையில் இருப்பதால் போரைப் பற்றி உங்களிடம் அதிகம் சொல்ல முடியாது' என்று சொன்னேன், நான் செல்லோ வாசிப்பதாக பேச்சுவாக்கில் சாதாரணமாகக் குறிப்பிட்டேன். உடனே அங்கிருந்த ஒரு பெண், 'ஓ, அது மிகவும் நல்லது. நீங்கள் காப்பாற்றப்படலாம்' என்றார்.
அங்கிருந்த நிலைமை உண்மையில் நம்ப முடியாததாக இருந்தது. நான் நிர்வாணமாக இருந்தேன், எனக்கு முடி இல்லை, கையில் ஒரு எண் பொறிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இப்படி பேசிக் கொண்டிருந்தது எனக்கு அபத்தமாக இருந்தது. அந்தப் பெண் சென்று இசைக்குழுவை நடத்தி வந்த அல்மா ரோஸ் என்பவரை அழைத்து வந்தார், நான் பிரபலமான பெண்கள் இசைக்குழுவில் உறுப்பினரானேன்" என்று அனிதா தான் எதிர்கொண்டதை விவரித்தார்.
அல்மா ரோஸ் இசையமைப்பாளர் குஸ்டாவ் மஹ்லரின் மருமகள், அவரது தந்தை வியன்னா பில்ஹார்மோனிக் இசைக்குழுவின் தலைவராக இருந்தார். அந்த வயலின் கலைஞர் முகாம் இசைக்குழுவை தொழில்முறை நேர்த்தியுடன் நடத்தினார் என்று அனிதா லாஸ்கர் கூறுகிறார்: "நாங்கள் என்ன இசைக்கப் போகிறோம் என்பதையும், நன்றாக வாசிக்கிறோமா என்பதைப் பற்றியும் எங்களைக் கவலைப்பட வைத்தார். எங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது போன்ற அச்சங்களை நாங்கள் தற்காலிகமாக மறந்துபோனோம்."
முகாமுக்கு அழைத்து வரப்பட்ட மற்றவர்களிடம் இருந்து திருடிய இசைக் கருவிகளைப் பயன்படுத்தி, இசைக்குழு சில குறிப்பிட்ட ராணுவ இசைத் தொகுப்பை வாசித்தது. "எங்கள் வேலை முகாமுக்கு வெளியே வேலை செய்தவர்களின் அணிவகுப்புகளுக்கு வாசிப்பது, அவர்கள் வெளியில் அணிவகுத்துச் செல்லும்போதும், மாலையில் திரும்பி வரும்போதும் இசைப்பது எங்கள் பணியாக இருந்தது," என்று அவர் கூறினார்.
கடந்த 1996ஆம் ஆண்டு, பிபிசி ரேடியோ 4இன் 'டெசர்ட் ஐலேண்ட் டிஸ்க்' நிகழ்ச்சியில் பேசிய அனிதா லாஸ்கர், ரோஸ் "மிக உயர்ந்த தர நிலைகளை" வைத்திருந்ததாக குறிப்பிட்டார். தங்கள் இசைக்குழு நன்றாக இசைக்கத் தவறினால் கொலை செய்யப்படுவார்கள் என்ற பயம் காரணமாக உயர் தரநிலை வைக்கப்பட்டதாகத் தனக்குத் தோன்றவில்லை என்று கூறினார்.
"இது எங்கள் கவலைகளில் இருந்து தப்பிக்க உதவினாலும், சிறப்பானதாக இருந்தது" என்று அவர் கூறினார்.
மேலும், "எப்படியோ அவர்கள் இறுதியில் உங்களைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற உண்மையை புரிந்துகொள்கிறீர்கள். ஆனால், அவர்கள் உங்களைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து செல்லுங்கள். உயிர் வாழ்வதற்கான ஒரே வாய்ப்பு மற்றவர்களுடன் இருப்பது என்று நான் நினைக்கிறேன். உண்மையில் தனித்திருந்து உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு யாருக்குமே இல்லை என்றே நான் கருதுறேன்" என்றார் அவர்.
ஆஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து பெல்சன் வரைரோஸ், ஏப்ரல் 1944இல் போட்யூலிசம் நோயால் இறந்தார். "நாங்கள் அல்மா ரோஸுக்கு கடன்பட்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். ஜெர்மானியர்களையும்கூட அவர் கண்ணியமாக நினைத்தார். ஜெர்மானியர்களும் அவரை மனித இனத்தைச் சேர்ந்தவரைப் போலவே நடத்தினார்கள்."
கடந்த 1944ஆம் ஆண்டு அக்டோபரில் பெண்கள் பெல்சன் வதை முகாமுக்கு மாற்றப்பட்டபோது இசை நிறுத்தப்பட்டது, அங்கு இசைக்குழு இல்லை. அங்கு நிலைமைகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மோசமாக இருந்தன என்று அனிதா லாஸ்கர் கூறினார்.
"அது உண்மையில் ஓர் இன அழிப்பு முகாம் அல்ல, மக்கள் செத்து விழுந்த ஒரு முகாம். அங்கு எரிவாயு அறைகள் இல்லை, அதற்கான தேவையும் இல்லை. ஏனென்றால் நோயால், பட்டினியால் மக்கள் இறந்தார்கள்."
கடந்த 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் படைகளால் பெல்சன் முகாம் விடுவிக்கப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. "இன்னும் ஒரு வாரம் கழிந்திருந்தால், நாங்கள் இருந்திருக்க மாட்டோம், உணவும் தண்ணீரும் இல்லாமல் மடிந்திருப்போம்" என்று அனிதா லாஸ்கர் கூறினார்.
போருக்குப் பிறகு, அனிதாவும் ரெனேட்டும் பிரிட்டனில் உள்ள தங்கள் சகோதரி மரியானை தொடர்பு கொண்டனர், 1946இல் அவர்கள் இருவரும் பிரிட்டனில் குடியேறினர்.
ரெனேட் ஓர் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றத் தொடங்கினார். 1982இல் தனது கணவருடன் பிரான்ஸுக்கு குடிபெயர்ந்தார். அவர் 97வது பிறந்தநாளுக்கு 11 நாட்களுக்கு முன்பு 2021இல் உயிரிழந்தார்.
கிண்டர்-டிரான்ஸ்போர்ட்டில் பிரிட்டனுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்ட மூத்த சகோதரி மரியான், போர் முடிந்த சில காலத்திலேயே குழந்தையைப் பிரசவிக்கும்போது இறந்தார். "விதியின் முரண்பாடுகள் இவைதான்" என்று அனிதா லாஸ்கர் 2005இல் கார்டியன் பத்திரிகைக்கான நேர்காணலில் கூறினார்.
அனிதா வெற்றிகரமான இசைக்கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார், ஆங்கில சேம்பர் இசைக்குழுவின் நிறுவன உறுப்பினராக ஆனார்.
பாரிஸுக்கு சென்றபோது, பிரெஸ்லாவில் தனது பள்ளி நாட்களில் நினைவுகூர்ந்த பியானோ மாணவரும் சக அகதியுமான பீட்டர் வால்ஃபிஷை சந்தித்தார். இருவரும் 1952இல் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒருவர், செல்லோ கலைஞர் ரஃபேல், அடுத்தவர் மனநல மருத்துவர் மாயா. அனிதா லாஸ்கரும் அவரது கணவரும் ஒருவருக்கொருவர் "கலப்பு மொழியில்" தொடர்புகொண்டாலும், "தன் குழந்தைகளிடம் ஜெர்மன் மொழியில் பேசுவது தனக்கு முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாக இருந்தது" என்று அவர் ஒப்புக்கொண்டார்.
அனிதா பல ஆண்டுகளாக, தான் ஒருபோதும் ஜெர்மனிக்கு திரும்பப் போவதில்லை என்று தனக்குத்தானே சபதம் செய்துகொண்டார். அங்கு அவர் பார்க்கக்கூடிய வயது வந்த நபர்களில் யார் வேண்டுமானாலும் தனது பெற்றோரைக் கொன்றிருக்கலாம் என்ற அச்சம் அவரைச் சூழ்ந்திருந்தது. ஆனால் காலப்போக்கில் அவர் தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக் கொண்டார்.
கடந்த 2018ஆம் ஆண்டுவாக்கில் ஜெர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்ற பெர்லினுக்கு அழைக்கப்பட்டார் அனிதா லாஸ்கர். அங்கு பேசிய அவர், "நான் எனது சத்தியத்தை மீறிவிட்டேன். அவை பற்பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை... அந்தச் சத்தியத்தை மீறியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதற்கான காரணம் மிகவும் எளிதானது: வெறுப்பு என்பது நச்சு, அதனால் இறுதியில் நீங்களே நஞ்சாகிவிடுவீர்கள்..."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு