சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமாக சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஏழைகள் எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் ரத்ததான முகாம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு, மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “இந்த தேசத்தின் முகமாக உள்ள தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறோம். தமிழ்நாட்டு மக்கள் மற்றும் தமிழ் பண்பாடு மீது தொடர்ந்து படை எடுப்பை பாஜக நடத்தி வருகிறது. தமிழ்நாட்டு வரலாற்றை இருட்டடிப்பு செய்கின்றனர்.அமர் நாத் ராமகிருஷ்ணனை கீழடி அறிக்கையை மாற்ற ஒன்றிய அரசு நிர்பந்தித்தது. ஆனால் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். சமஸ்கிருதம் பெரியதா தமிழ் பெரியதா என்ற அவர்களின் கௌரவத்திற்கு தற்போது போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு வரலாற்றை மறைப்பதற்கு வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் எந்த முகத்தோடு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதற்கு இது ஒரு முன் உதாரணம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என தகவல் பரவுகிறது. திமுக கூட்டணியில் எந்த ஓட்டையும் விழாது. இந்த கூட்டணி எஃகு கோட்டையாக உள்ளது. இது இந்த தலைமுறைக்கான கூட்டணி மட்டும் இல்லை, அடுத்த தலைமுறைக்கான கூட்டணியாக உறுதியான கூட்டணியாக உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 11 ஆண்டுகளாக அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு ஏமாற்றி வருகிறது. வடமாநிலங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசு நிதி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டில் இருந்து நிதி பெறப்படுகிறது. இதிலிருந்து தமிழ்நாட்டு மக்களை பாஜக எவ்வளவு ஒர வஞ்சனையுடன் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு முன் உதாரணம். காமராஜர் காலத்திலேயே தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு விட்டது” என்றார்.