பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சோதனை நடத்திய நிலையில் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சோதனையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் எதன் அடிப்படையில் இருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சீல் வைக்க உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என கேள்வி எழுப்பினர். பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்திருந்த நிலையில் மீண்டும் வழக்கு கடந்த 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரங்களும் இல்லை என நீதிமன்றம் கூறியது. மேலும் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரநாத் மீது மேல் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதோட சோதனை நடத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.