உணவகத்தில் உள்ள ஓர் ஊழியரிடம் சிறிது நேரம் பேசுவது அல்லது சாலையில் சந்திக்கும் ஒருவரிடம் "வணக்கம்" சொல்வது போன்ற மிகச் சிறிய மனித உரையாடல்கள்கூட மக்களை மகிழ்ச்சியடையச் செய்கின்றன என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
துருக்கியில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகள், மற்றவர்களுடன் பழகுவது மக்களின் நல்வாழ்வை எவ்வாறு மேம்படுத்துகின்றன என்பதைப் பற்றி அறிய உதவுகிறது.
"உணர்வு ரீதியாக நமக்கு நெருக்கமில்லாதவர்களுடன் ஏற்படும் சாதாரண தொடர்புகள்கூட வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நாங்கள் கண்டறிந்தோம்," என்று சபான்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும் இந்த சமூக அறிவியல் ஆய்வின் முதன்மை ஆசிரியருமான எஸ்ரா அஸ்கிகில் கூறுகிறார்.
அதில், பேருந்தில் இறங்கும்போது ஓட்டுநருக்கு நன்றி கூறுவது அல்லது தெரிந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்ற செயல்களும் அடங்கும் என அவர் விளக்குகிறார்.
ஆனால், உலகெங்கிலும் உள்ள பலர் அறிமுகமில்லாதவர்களுடன் உரையாடுவதை சங்கடமாக உணர்கிறார்கள். இது அர்த்தமற்றது, மோசமானது அல்லது பாதுகாப்பற்றது என்று நினைக்கிறார்கள் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அறிமுகமில்லாத நபர்களுடன் சிறிது நேரம் பேசுவது மக்களின் மகிழ்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கிறது? அறிமுகமில்லாத நபர்களுடன் உரையாடலைப் பாதுகாப்பாகத் தொடங்குவதற்கான சிறந்த வழிகள் யாவை? இங்கு விரிவாகக் காண்போம்.
அறிமுகமில்லாத நபர்களுடன் உரையாடுவதில் உள்ள நன்மைகள்அறிமுகமில்லாத ஒருவருடன் பழகும்போது மனநிலை மேம்படுவதோடு, மக்கள் தங்கள் சுற்றுப்புறத்துடன் அதிக தொடர்பில் இருப்பதாக உணர்கிறார்கள் என்கிறார் பிரிட்டனின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் முனைவர் கில்லியன் சாண்ட்ஸ்ட்ரோம்.
அறிமுகமில்லாத நபர்களுடன் சிறிது நேரம் உரையாடுவதன் நன்மைகள் பற்றிய உலகளாவிய ஆராய்ச்சியில் முன்னணி நபர்களில் ஒருவராகவும், துருக்கியில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வின் இணை ஆசிரியராகவும் உள்ளார் கில்லியன் சாண்ட்ஸ்ட்ரோம்.
தொடர்ந்து பேசிய அவர், "(அறிமுகமில்லாதவர்களுடன் தொடர்பு கொள்வது) சமூகத்துடன் நீங்கள் இணைந்திருப்பதைப் போலவும், மற்றவர்கள் 'உங்களைக் கவனிக்கிறார்கள்' என்று உணர்வதற்கும் பங்களிக்கிறது. இது மக்களுக்கான ஓர் அடிப்படைத் தேவை. இது நாம் எப்படி உணர்கிறோம் என்பதை மட்டுமல்ல, நம் உடலிலும், நமது உடல் ஆரோக்கியத்திலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்று விளக்கினார்.
சாண்ட்ஸ்ட்ரோம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் தலைப்பின் மீது ஆர்வம் கொண்டார்.
அவர் தன்னை ஒரு கூச்ச சுபாவமுள்ள நபர் மற்றும் மற்றவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்பாதவர் என்று அழைத்துக்கொண்ட போதிலும் அறிமுகமில்லாத நூற்றுக்கணக்கான மக்களுடன் அவர் உரையாடியுள்ளார்.
அதனால் அவர் மற்றவர்களைப் பார்க்கும் விதம் மாறிவிட்டதாகவும், இது அவர் மக்கள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்ததாகவும் நம்புகிறார்.
"இது எப்போதுமே இனிமையானதாக உள்ளது. சில நேரங்களில் சிறப்பாக எதுவும் இருக்காது. ஆனால் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன், வேடிக்கையான கதைகளைக் கேட்டேன், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றேன். இது நான் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதைப் போன்ற உணர்வைத் தருவதோடு, என்னைப் பாதுகாப்பாக உணர வைக்கிறது," என்கிறார் சாண்ட்ஸ்ட்ரோம்.
இதுபோன்று குறுகிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் சமூகத் தொடர்புகள், இந்தச் சமூகத்தோடு நாமும் இணைத்துள்ளோம் என்ற உணர்வை நேரடியாக வலுப்படுத்துவதாக ஜப்பானில் உள்ள ரிக்கியோ பல்கலைக்கழக ஆய்வாளர் இடாரு இஷிகுரோ ஒப்புக்கொள்கிறார்.
இவர் மேற்கத்திய சமூகங்களுக்கு வெளியே இந்தத் தலைப்பில் நடத்தப்பட்ட சில ஆய்வுகளில் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
"நாம் ஏற்றுக்கொள்ளப் படுகிறோம் என்ற உணர்வு நமது நல்வாழ்வுக்கு சாதகமான பங்களிப்பைச் செய்கிறது," என்று அவர் கூறுகிறார்.
சாண்ட்ஸ்ட்ரோமின் கூற்றுப்படி, அறிமுகமில்லாதவர்களுடன் சிறிது நேரம் உரையாடுவதற்கு பலன்கள் இருப்பதை மக்கள் பெரும்பாலும் உணரவில்லை, அது அர்த்தமற்றது அல்லது நேர விரயம் என்று கருதுகின்றனர். ஆனால் இதில் இருக்கும் மிகவும் பொதுவான தடை அச்சம்தான்.
"மற்றவர்கள் நிராகரிப்பதைவிட, பேசும்போது தீடீரென ஏற்படும் தவறுகள் அல்லது தயக்கம் குறித்தே மக்கள் அதிகமாகக் கவலைப்படுகிறார்கள் என்பதைத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதுகுறித்து மேலும் பேசிய இட்டாரு இஷிகுரோ, "இத்தகைய குறுகிய நேர உரையாடல்கள் கலாசார ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுமா என்று பலர் கவலைப்படுகிறார்கள். அப்படி ஏற்றுக் கொள்ளும் நிலை ஒரே நாட்டிற்குள்கூட வெவ்வேறு பகுதிகளில் மாறுபடும்" என்றார்.
"உதாரணமாக, ஜப்பானின் டோஹோகு பகுதியில் உள்ள ஹிரோசாகி என்ற சிறிய நகரத்தின் தெருக்களில் நான் என் குழந்தையுடன் நடந்து செல்லும்போது, பலர் எங்களிடம் வந்து 'என்ன அழகான குழந்தை' என்று கூறுவார்கள். இருப்பினும், நான் டோக்கியோ பெருநகரப் பகுதிக்குச் சென்றபோது இது அரிதாகவே நடந்தது" என்று விவரிக்கிறார் அவர்.
இப்படியான அச்சம் குழந்தைப் பருவத்தில் இருந்து ஏற்படும். இது குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பொது ஆலோசனைகளில் இருந்து உருவாகிறது.
ஆங்கிலம் பேசும் நாடுகளில், பல ஆண்டுகளாக அறிமுகம் இல்லாதவர்களுடன் பழக வேண்டாம் என்று குழந்தைகளை அறிவுறுத்தும் பிரசாரம் "அறிமுகமில்லாதவர் ஆபத்தானவர் (Stranger Danger)" என்று அறியப்பட்டது.
"இப்போது வழங்கப்படும் அறிவுரை மிகவும் நுணுக்கமானதாக உள்ளது. ஆம், அறிமுகமில்லாதவர்கள் ஆபத்தானவர்களாக இருக்கலாம். ஆனால் நமக்கு உதவி செய்யும் அறிமுகமில்லாத நபர்களும் உள்ளனர்" என்கிறார் கில்லியன் சாண்ட்ஸ்ட்ரோம்.
எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் குழந்தைகள் தாங்கள் நம்பக்கூடிய "பாதுகாப்பான அறிமுகமில்லாதவர்களை" அடையாளம் காண கற்றுக் கொடுக்கப்படுகிறார்கள்.
அதாவது அவர்கள் நம்பகத்தன்மையுடன் பழகக் கூடியவர்கள். உதாரணமாக மற்றொரு குழந்தையுடன் இருக்கும் பெற்றோர் அல்லது காவல்துறையினர், சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் போன்ற சீருடை அணிந்தவர்களை அடையாளம் காண பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.
அதே நேரம் இளைஞர்கள் அறிமுகமில்லாதவர்களுடன் பழகுவதற்குப் பல்வேறு பாதுகாப்பான வழிகள் உள்ளன என்று சாண்ட்ஸ்டார்ம் நம்புகிறார்.
"இருண்ட தெருக்களில் உள்ளவர்களுடன் பேசுவதை நான் பரிந்துரைக்கவில்லை. ஆனால் பொது இடங்களில், மற்ற மனிதர்கள் சூழ்ந்திருக்கும் நேரங்களில், பிறருடன் சிறிது நேரம் பேசுவதைவிட, மக்கள் பெரும்பாலும் தனிமையை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?" என்கிறார் சாண்ட்ஸ்டார்ம்.
உங்களுக்குத் தெரியாத ஒருவருடன் எப்படி உரையாடலில் ஈடுபடுவது என்பது குறித்த உதவிக் குறிப்புகளை சாண்ட்ஸ்ட்ரோம் பகிர்ந்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு