விமான விபத்து: மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை..!
Newstm Tamil June 21, 2025 09:48 PM

 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 டிரீம்லைனர்' விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

மேலும், விபத்திற்குள்ளான விமானம் மெக்நானிநகர் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தின்போது அந்த இடத்தில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பாதியாகவோ, அல்லது முழுவதுமாகவோ எரிந்து காணப்பட்டதால், அவர்களை அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து உடல்களை அடையாளம் காண்பதற்காக, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த டி.என்.ஏ. மாதிரிகள் மூலம் உயிரிழந்த நபர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளை குஜராத் சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், விமான விபத்தின் எதிரொலியாக ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 மூத்த அதிகாரிகளை மாற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்களை ஊழியர்களுக்கான பணி ஒதுக்கிட்டு பிரிவில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இந்த அதிகாரிகள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.