திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, வரும் சட்டமன்ற தேர்தலில் 12 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ நேற்று திருச்சியில் பேட்டி அளித்தபோது, "எங்கள் கட்சி மாநில அங்கீகாரம் பெற வேண்டும் என்றால், வரும் சட்டசபை தேர்தலில் குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று எங்கள் தொண்டர்கள் விரும்புகின்றனர். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் போல நாங்களும் எங்கள் விருப்பத்தை சொல்கிறோம். ஆனால், மதிமுக தலைமைதான் போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்யும்," என்று கூறினார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இணைந்த மதிமுக, 2021 மற்றும் 2024 ஆகிய தேர்தல்களிலும் தொடர்ந்து இந்த கூட்டணியிலேயே இருந்தது. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதே கூட்டணியில் இருக்கும் என்று கூறப்பட்டாலும், குறைந்தது 12 தொகுதிகள் வேண்டும் என்று மதிமுக கூறியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு மதிமுக, திமுக கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டது. அதுமட்டுமின்றி, ஆறு தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகளும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலா 12 தொகுதிகளும் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மதிமுகவும் 12 தொகுதிகள் கேட்பதால், கூட்டணிக்குள் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva