காலி இடத்தை தான் அமெரிக்கா தாக்கியுள்ளது. அணுசக்தி நிலையத்தை நாங்கள் மாற்றிவிட்டோம்: ஈரான்
Webdunia Tamil June 22, 2025 05:48 PM

மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் பதற்றம் 10வது நாளாக தொடரும் நிலையில், ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி, மே 13ஆம் தேதி முதல் ஈரானின் அணுசக்தி வளாகங்கள் மற்றும் யுரேனியம் செறிவூட்டும் மையங்கள் மீது தாக்குதல்களை தொடுத்து வருகிறது. தற்போது இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா, ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. ஆனால் இந்த் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. "அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை; அங்கு இருந்த உபகரணங்கள் மற்றும் பொருட்களை எல்லாம் நாங்கள் ஏற்கனவே பாதுகாப்பாக அகற்றிவிட்டோம்," என்று கூறியுள்ளது.

ஈரான் அதிகாரி ஹசன் அபேதினி, "அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை; டிரம்ப் சொல்வது உண்மையாக இருந்தாலும் கூட, ஈரான் பொருட்களை ஏற்கனவே அகற்றிவிட்டதால் பெரிய அடியை சந்திக்கவில்லை," என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படுமா என்பது குறித்து "இரு வாரங்களுக்குள் முடிவு" என தெரிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவங்கள் மத்திய கிழக்கு மற்றும் உலக அளவில் போர் குறித்த அச்சங்களை மேலும் அதிகரித்துள்ளன.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.