தோனி சாதனையை தகர்த்த ரிஷப் பந்த்: புதிய கேப்டன் கில் பவுலர்களை கையாளும் உத்தி பற்றி எழும் கேள்விகள்
BBC Tamil June 22, 2025 03:48 PM
Getty Images சதம் அடித்த இந்திய வீரர் ரிஷப் பந்த்

ஹெடிங்லியில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம், வாய்ப்புகளையும் எதிரணி செய்யும் தவறுகளையும் சரியாக பயன்படுத்தியவர்களுக்கு உரிய நாளாக அமைந்தது. அந்த வகையில் நேற்றைய நாள் இங்கிலாந்தின் நாளாகவே இருந்தது.

இந்திய அணியில் ரிஷப் பந்தின் 7-வது டெஸ்ட் சதத்தைத் தவிர பெரிதாக இந்திய வீரர்கள் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 3 விக்கெட் இழப்புக்கு வரை 430 ரன்கள் என்று வலுவாக இருந்த இந்திய அணி, எப்படியும் 600 ரன்களை எட்டும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், அடுத்த 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும் மளமளவென இழந்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணியும் தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்திருப்பது நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும். ரிஷப் பந்த் சதம் அடித்ததன் மூலம் எட்டியு புதிய மைல்கற்கள் என்ன?

கேப்டன் கில் - ரிஷப் பந்த் ஜோடி சிறப்பான ஆட்டம்

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது. கில் 127 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ரிஷப் பந்த் வேகமாக ரன்களைச் சேர்க்கவே, கில் நிதானமாக ஆடினார். ரிஷப் பந்த் வழக்கத்தைவிட பவுண்டரிகளை அடித்து சதத்தை நெருங்கினார். 99 ரன்களில் இருந்த ரிஷப் பந்த் பஷீர் பந்தில் சிக்ஸர் அடித்து, டெஸ்ட் அரங்கில் 7-வது சதத்தை நிறைவு செய்தார்.

சதம் அடித்தவுடன் ரிஷப் பந்த் தனது ஹெல்மெட்டை கழற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, தனது வழக்கமான "சம்மர்சால்ட்" பல்டி அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இந்த பார்ட்னர்ஷிப் 200 ரன்களைக் கடந்தது. சுப்மான் கில் 150 ரன்களை எட்டும் நிலையில், விக்கெட்டை இழந்தார். பஷீர் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முற்பட்டபோது, ஸ்குயர் லெக் திசையில் டங்கிடம் கேட்ச் கொடுத்து 147 ரன்களில் கில் விக்கெட்டை இழந்தார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 209 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

இதன் மூலம் கேப்டனாக அறிமுக ஆட்டத்திலேயே அதிக ரன்கள் சேர்த்த 2வது வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். முதலிடத்தில் விஜய் ஹசாரே 160 ரன்களில் முதலிடத்தில் உள்ளார்.

  • 18 ஆண்டு ஏக்கத்தை தீர்க்குமா இந்திய இளம் படை? அணியில் யாருக்கு வாய்ப்பு அதிகம்?
  • பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிப்பதற்கான விதிகளில் மாற்றம் - ஐசிசி புதிய விதிகள் என்ன?
Getty Images கில் 127 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர் திருப்புமுனை கேட்ச்

அடுத்து வந்த கருண் நாயர், ரிஷப் பந்துடன் சேர்ந்தார். 8 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணிக்காக களமிறங்கியதால் கருண் நாயர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை கவர் திசையில் தூக்கி அடித்தார் கருண் நாயர். நிச்சயமாக கருண் நாயர் அடித்த ஷாட்டில் கேட்ச் பிடிப்பது கடினமானது.

ஆனால், பீல்டிங்கில் இருந்த ஒலி போப் அந்தரத்தில் தாவிச் சென்று அற்புதமான கேட்ச் பிடித்து கருண் நாயர் விக்கெட்டைவீழ்த்தினார். மிகுந்த ஆசைகளுடன் களமிறங்கிய கருண் நாயர் இந்த கேட்சை நிச்சமயாக எதிர்பார்த்திருக்கமாட்டார். மிகுந்த ஏமாற்றத்துடன் கருண் நாயர் டக்அவுட்டில் வெளியேறினார். ஆட்டத்தில் கருண் நாயர் விக்கெட்தான் திருப்புமுனையாக அமைந்து, இங்கிலாந்தின் கரங்களுக்கு ஆட்டம் மாறியது.

Getty Images கருண் நாயர் ஆட்டமிழந்து வெளியேறிய காட்சி ரிஷப் பந்தும் சிக்ஸரும்

அடுத்து ஜடேஜா களமிறங்கினார். ரிஷப் பந்த் சதம் அடித்தபின் பவுண்டரி, சிக்ஸர் என அடித்து வேகமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கி, 150 ரன்களுக்கு நெருங்கினார். ஆனால், டங்க் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ரிஷப் பந்த் 134 ரன்களில் ஆட்டமிழந்தார், இவர் கணக்கில் 6 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும்.

கேப்டன் சுப்மான் கில் (147), ரிஷப் பந்த் (134) ஜோடி 209 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தபின் நடுவரிசை பேட்டர்கள், கடைசிவரிசை பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்திய அணி அதிர்ச்சிகரமாக இழந்து முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  • கில், ஜெய்ஸ்வால் அபார சதம்: இந்திய இளம் படை இங்கிலாந்து மண்ணில் முதல் நாளே புதிய சாதனை
  • கருண் நாயர் மறுபிறவி - இந்திய அணிக்கு தன்னை நிரூபிக்க இங்கிலாந்தில் அவர் செய்தது என்ன?
Getty Images ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்த காட்சி இங்கிலாந்து வலுவான தொடக்கம்

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியது. அப்போது லேசான மேக மூட்டம், குளிர்ந்த காற்று வீசியதை பயன்படுத்திய பும்ரா தனது ஸ்விங் பந்துவீச்சில் புதிய பந்தில் கிராளி விக்கெட்டை எளிதாக வீழ்த்தினார். ஆனால், 2வது விக்கெட்டுக்கு டக்கெட், போப் இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவைத் தடுத்து பேட் செய்தனர்.

பென் டக்கெட் 15 ரன்களில் இருந்தபோது ஸ்லிப்பில் அடித்த ஷாட்டை ரவீந்திர ஜடேஜா கேட்ச் பிடிக்கத் தவறினார், போப் 10 ரன்களில் இருந்தபோது பேட்டில் தெறித்த பந்தை கேட்ச் பிடிக்க ஜெய்ஸ்வால் தவறி இரு வாய்ப்புகளை வீணடித்தனர். இந்த இரு வாய்ப்புகளையும் இங்கிலாந்து பேட்டர்கள் பயன்படுத்தி நங்கூரமிட்டனர்.

சிறப்பாக ஆடிய டக்கெட் 68 பந்துகளில் அரைசதம் அடித்து 19-வது அரைசதத்தை நிறைவு செய்தார். 2-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து டக்கெட் 62 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் போல்டாகினார். போப் 64 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்துவந்த ஜோ ரூட், போப்புடன் சேர்ந்தார். இருவரையும் பிரிக்க பல பந்துவீச்சாளர்களை கேப்டன் கில் பயன்படு்த்தினார்.

Getty Images 2வது விக்கெட்டுக்கு டக்கெட், போப் இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவைத் தடுத்து பேட் செய்தனர் பும்ராவை விரக்தி அடையச் செய்த நோபால்

நிதானமாக ஆடி வந்த ஜோ ரூட் 28 ரன்கள் சேர்த்திருந்தபோது, பும்ரா பந்துவீச்சில் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து ஹேரி புரூக் களமிறங்கி, போப்புடன் சேர்ந்தார். 125 பந்துகளில் போப் சதத்தை நிறைவு செய்தார்.

கடைசி நேர ஓவர்களில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதி பும்ரா தனது முழு முயற்சியையும் செலுத்தினார். 2வது நாளின் கடைசி ஓவரை பும்ரா வீசியபோது, ஹேரி ப்ரூக் அடித்த ஷாட்டை கருண் நாயர் கேட்ச் பிடித்தார். ஆனால், அது நோபாலாக அறிவிக்கப்படவே பும்ரா விரக்தி அடைந்தார். பும்ரா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 நோபால்களை வீசினார்.

இந்திய அணித் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் பும்ரா மட்டுமே வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா, சிராஜ், ஜடேஜா 10 ஓவர்களுக்கு மேல் வீசியும் ஒருவிக்கெட்டையும் இந்த ஆடுகளத்தில் வீழ்த்த முடியவில்லை. 3வது நாளில் ஆடுகளம் இந்திய பந்துவீச்சாளர்களை இன்னும் சோதிக்கப் போகிறது.

  • கவாஸ்கர், சச்சின் வரிசையில் தோனி: ஐசிசி அறிவித்துள்ள ஹால் ஆஃப் பேம் என்பது என்ன?
  • டெஸ்ட் சாம்பியன் பைனல்: ஆஸ்திரேலியா செய்துள்ள மாற்றம் தென் ஆப்ரிக்காவை குழப்பும் உத்தியா?
Getty Images 125 பந்துகளில் போப் சதத்தை நிறைவு செய்தார். கில் கேப்டன்சி மீது எழும் கேள்வி

ஷர்துல் தாக்கூரை 40 ஓவர்களுக்கு மேல் பயன்படுத்தியும் எந்த பயனும் இல்லை. பந்து நன்றாக தேய்ந்துவிட்டநிலையில் ஷர்துல் தாக்கூரால் எந்த தாக்கத்தையும் பந்துவீச்சில் ஏற்படுத்த முடியவில்லை. புதிய பந்தாக இருக்கும்போதே பிரசித் கிருஷ்ணா, பும்ரா, சிராஜ், ஷர்துல் என 4 பேருக்கும் சமமான வாய்ப்புக் கிடைத்திருந்தால் இன்னும் கூடுதலாக விக்கெட்டை வீழ்த்தியிருக்கலாம்.

ஆனால், கேப்டன் கில் 3 பந்துவீச்சாளர்களையே பிரதானமாகப் பயன்படுத்தினார். சுழற்பந்தவீச்சாளர் ஜடேஜாவுக்கு நேற்று 9 ஓவர்கள் மட்டுமே வழங்கினார். இதுவே கோலி, ரோஹித் சர்மாவாக இருந்திருந்தால், சுழற்பந்துவீச்சுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கியிருப்பார்கள்.

ஆடுகளம் தனது தன்மையை இழந்து தூசி படிந்து வருவதால், இந்த நேரத்தில் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதுதான் சிறந்தது. ஆனால், கில் ஏன் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளி்க்கிறார் எனத் தெரியவில்லை.

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பர்களில் தோனியின் 6வது சதத்தை முறியடித்து, ரிஷப் பந்த் புதிய சாதனை நிகழ்த்தினார். இதன் மூலம் இந்திய விக்கெட் கீப்பர்களில் டெஸ்ட் அரங்கில் அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் ரிஷப் பந்த்.

பிரிட்டன் மண்ணில் ரிஷப் பந்த் அடித்த 3வது சதம் இதுவாகும். எந்த அணியின் விக்கெட் கீப்பரும் இங்கிலாந்து மண்ணில் 3 சதங்களை விளாசியது இல்லை. ரிஷப் பந்த் தவிர்த்து ஜிம்பாப்பே விக்கெட் கீப்பர் ஆன்டி பிளவர் இந்தியாவில் 3 சதங்களையும், இங்கிலாந்தின் லெஸ் ஆம்ஸ் மே.இ.தீவுகளிலும் 3 சதங்களை விளாசியுள்ளனர்.

பிரிட்டன் மண்ணில் வெளிநாட்டு அணியின் விக்கெட் கீப்பர் ஒருவர் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்ததில் ரிஷப் பந்த்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளார். வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையும் ரிஷப் பந்த்துக்கு கிடைத்துள்ளது, முதலிடத்தில் ஹர்திக் பாண்டியா இலங்கையில் 7 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.

ரிஷப் பந்த் சேர்த்த 134 ரன்கள் தான் ஹெடிங்லி மைதானத்தில் விக்கெட் கீப்பர் சேர்த்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன், இலங்கைக்கு எதிராக பேர்ஸ்டோ 140 ரன்கள் சேர்த்துள்ளார்.

2018ம் ஆண்டுக்குப்பின் ஒரு இன்னிங்ஸில் 3 இந்திய பேட்டர்கள் சதம் அடிப்பது இதுதான். இதுவரை 5 முறை இதுபோல் 3 பேட்டர்கள் சதம் அடித்துள்ளனர். கடைசியாக 2002ம் ஆண்டில் இதே ஹெடிங்லி மைதானத்தில் திராவிட், கங்குலி, சச்சின் சதம் அடித்த நிலையில் ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்குப்பின் ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பந்த் சதம் அடித்துள்ளனர்.

  • கோலி போலவே சுப்மன் கில்லும் டெஸ்ட் கேப்டனானதும் ஜாம்பவானாக எழுச்சி பெறுவாரா?
  • சாய் சுதர்சன் மற்ற பேட்டர்களை விட மாறுபட்டு தனித்து நிற்பது எப்படி?
Getty Images சிக்ஸர் அடித்து சதம்

3 முறை ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டியில் சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்துள்ளார். 2018ல் ஓவல் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் அடில் ரஷீத் பந்தில் சிக்ஸர் அடித்தும், 2021ல் ஆமதபாத்தில் ஜோ ரூட் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தும், இப்போது பஷீர் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தும் ரிஷப் பந்த் சதத்தை நிறைவு செய்துள்ளார்.

சச்சின் 6 முறையும், ரோஹித் சர்மா 3 முறையும் சிக்ஸர் அடித்து சதம் நிறைவு செய்துள்ளனர். 2002ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் அரங்கில் ரிஷப் பந்த்தைப் போல் டெஸ்ட் அரங்கில் எந்த விக்கெட் கீப்பரும், பேட்டரும் சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளம் எப்படி?

ஆடுகளத்தில் பெரிதாக பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வேகப்பந்துவீச்சாளர்கள் உயிரைக் கொடுத்து பந்துவீசினாலும் ஸ்விங் ஆவதற்கு மறுக்கிறது, அதனால்தான் ஒன்றரை நாட்களில் இந்திய அணியால் 470 ரன்கள் சேர்க்க முடிந்தது, இங்கிலாந்து அணியும் விரைவாக 200 ரன்களை எட்ட முடிந்தது.

2வது நாளிலேயே ஆடுகளம் இவ்வாறு பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காமல் இருந்தால், அடுத்துவரும் நாட்களில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் காத்திருக்கிறது என்றே கூற வேண்டும். கடைசி இரு நாட்களில் ஆடுகளம் வறண்டால் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். அப்படி நடக்கும் பட்சத்தில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தில் தாக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.