மதுரையில் இன்று முருகர் மாநாடு.. சிறப்பு அழைப்பாளராக பவன் கல்யாண்.. கூடுதல் பாதுகாப்பு..!
Webdunia Tamil June 22, 2025 03:48 PM

மதுரையில் இன்று முருகர் மாநாடு நடைபெற உள்ளதை தொடர்ந்து, காவல்துறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த மாநாட்டிற்கு ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டி கோவில் அருகே இன்று பிற்பகல் 3 மணிக்கு முருகர் மாநாடு தொடங்க உள்ளது. ஆன்மீக பெரியவர்கள், அரசியல் பிரபலங்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்று பேச உள்ளனர். மேலும், திரளான மக்கள் ஒன்றாக கூடி கந்த சஷ்டி கவசம் படிக்கும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியும் இந்த மாநாட்டில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் முருகர் மாநாடு நடைபெற உள்ளது. பக்தர்கள் அமர்வதற்கு விரிவான ஏற்பாடுகள், பார்வையாளர்கள் அமர்வதற்குத் தனியான பகுதிகள், அகலமான பாதைகள், 2000-க்கும் மேற்பட்ட நாற்காலிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தற்காலிக குப்பைத் தொட்டிகள், 13 எல்.இ.டி. திரைகள் உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று காலை 11 மணிக்கு மதுரை வருகிறார் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மாநாட்டை அடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.