'கடவுள் பெயரை வைத்து அரசியல் செய்கிறார்கள், தமிழ் கடவுள் என்று சொன்னால் அது கலைஞர் தான்'; அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு..!
Seithipunal Tamil June 23, 2025 06:48 AM

‘’முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்தநாள்’’ செம்மொழி நாளை முன்னிட்டு நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. எழும்பூர் வடக்கு பகுதி செயலாளர் சோ.வேலு ஏற்பாட்டில் சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. 

நிகழ்வில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். அத்துடன், பொதுக் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாஞ்சில் சம்பத், திமுக இளம் பேச்சாளர் மில்லர் மண்டேலா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இவர்களுடன் சட்டத்துறை இணை செயலாளர் ரவிச்சந்திரன், பகுதி செயலாளர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியபோது கூறியதாவது:  பெரியாரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது தான். அன்றைய காலகட்டத்தில் கலைஞர் அதனை சட்டமாக கொண்டு வந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைக்கு கடவுள் பெயரை வைத்து அரசியல் செய்கிறார்கள். தமிழ் கடவுள் என்று சொன்னால் நம்மைப் பொறுத்தவரையில் கலைஞர் தான். 05 முறை தமிழ்நாட்டை ஆண்டவர் நமது கலைஞர்தான். நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றதால் 03 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ள நிலையில் முருகன் தொடர்பாக நடக்க உள்ள மாநாட்டில் முருகனின் புகைப்படத்தைவிட முக்கியஸ்தர்களின் புகைப்படம்தான் பெரிய அளவில் உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது:  கலைஞரின் ஆட்சியில் 50 ஆண்டுக்கு முன்பு அண்ணா மேம்பாலம் அமைக்கப்பட்டது என்றும்,  அடுத்த தலைமுறையினரை மனதில் வைத்து ஆட்சி புரியக்கூடிய ஒரு இயக்கம் திமுக என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக இயக்கத்தில் மட்டும்தான் பொறுப்புகள் இல்லை என்றால் கூட நான் உடன்பிறப்பு என அனைவரும் ஒன்றிணைந்து நிற்கக்கூடிய இயக்கம். திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் வள்ளுவர் கோட்டம் என்கின்ற ஒன்றினை கலைஞர் அன்றே கட்டி முடித்தார். அதனை இன்று பலரும் ஆசையுடன் வருகை புரிந்து பார்க்கக்கூடிய அளவிற்கு மாற்றியது நமது முதலமைச்சர்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறிப்பாக ஒட்டுமொத்த இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். ஏனெனில் பகுப்பாய்ந்து நாம் செயலாற்றுவதன் காரணத்தினால் இது சாத்தியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.