ஆஸ்திரேலியாவின் ‘ஐயன்வுமன்’ தடகள வீராங்கனையான 19 வயது ஆட்ரி கிரிஃபின் என்பவர், கடந்த மார்ச் 24 அன்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக டாரன்ஸ் (53) என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட நபர் சிறைக்குள் முகச்சவர ரேஸரை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஆட்ரி கிரிஃபின் விடுதி ஒன்றிலிருந்து தனது தந்தையின் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, டாரன்ஸுக்கும் இடையில், ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டார்.
கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட டாரன்ஸ், போதைப்பொருள் பழக்கத்தால் கடந்த ஐந்து நாட்களாகத் தூங்காமல் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், சில்வர் வாட்டர் சிறையில் 24 மணி நேர தீவிர கண்காணிப்பின் கீழ், தற்கொலை செய்துகொள்ள முடியாத சிறப்பு ஆடைகள் அணிவிக்கப்பட்டு, தனிமைச் சிறையில் டாரன்ஸ், அடைக்கப்பட்டிருந்தார்.
பின்னர், அவர் சக கைதி அறைக்கு மாற்றப்பட்ட நிலையில், அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காகச் முகச்சவரம் செய்ய வேண்டும் எனக் கூறி ஒரு ரேஸரை வாங்கியுள்ளார். மறுநாள் விடுமுறை என்பதால் நீதிமன்றம் செயல்படவில்லை. அந்த நிலையில், அந்த ரேஸரைக் கொண்டு, கடந்த ஏப்ரல் 24 அன்று டாரன்ஸ் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
டாரன்ஸின் தற்கொலையால், தங்கள் மகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்காமற் போனதே என கிரிஃபினின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். டாரன்ஸின் முன்னாள் மனைவி கூறுகையில், ‘அவர் என்னைக் கொல்லத்தான் வந்தான்; ஆனால் வழியில் சிக்கிய கிரிஃபினைக் கொன்றுவிட்டார்’ என்று கூறியதாக போலீசார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.