'ஆபரேஷன் சிந்தூர்' இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை நிகழ்வு : தமிழக ஆளுநர்..!
Seithipunal Tamil June 23, 2025 08:48 AM

இந்திய வரலாற்றில்  'ஆபரேஷன் சிந்துார்' ஒரு திருப்பு முனை நிகழ்வாக இருந்து வருவதாக  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர், பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து 'ஆபரேஷன் சிந்துார்' மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதை  ஆயுதப்படை வீரர்களை கவுரவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது: இந்திய வரலாற்றில் 'ஆபரேஷன் சிந்தூர்' ஒரு திருப்புமுனை நிகழ்வாக இருந்து வருகிறது என்றும், பிரதமர் மோடி, 'இது ஒரு எழுச்சி பெறும் புதிய இந்தியாவின் இடிமுழக்கம்' என பாராட்டினார் என்றும், 'ஆபரேஷன் சிந்தூர்' பல வழிகளிலும், குறிப்பாக பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்ப்பது என்பது குறித்து ஒரு திருப்புமுனை இயக்கமாக இருந்தது புகழாரம் சூட்டினார்.

அத்துடன், பயங்கரவாத எதிர்ப்பு உத்திகளில், இந்திய ராணுவ திறன் மற்றும் தீர்மானத்தையும், உலகளாவிய பாதுகாப்பு கவலைகளுக்கு எதிரான தயார் நிலையையும் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் நமது தீர்மானத்தின் அடையாளமாக 'ஆபரேஷன் சிந்தூர் காணப்பட்டது என்றும் தெரிவித்தார்.

அத்தோடு, பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கை என்பதால், இது இந்திய பாதுகாப்பு உத்தியில் ஒரு புதிய அத்தியாயமாக கருதப்படுவதாக ஆளுநர் ரவி மேலும் குறிப்பிட்டார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.