ஈரானுக்கு ஆதரவாக ஏமன் போரில் களமிறங்கியுள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி அந்நாட்டின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் தரப்பிலும் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இருதரப்பும் மாறி மாறி நடத்தும் கடுமையான தாக்குதல்களால், இருப்பக்கத்திலுமே ஏராளமான உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தொடர் தாக்குதலால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்துவரும் அமெரிக்கா தற்போது ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஈரானில் ஃபார்டவுவ் , நடான்ஸ் மற்றும் இஸ்பாஹான் ஆகிய மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
அத்துடன் ஈரான் அமைதி பாதைக்கு திரும்பாவிட்டால் பெரும் அழிவை சந்திக்க நேரிடும் என்றும் அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மத்தியஸ்தம் செய்து போரை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்த்தால், தனது படைகளை இறக்கி தாக்குதல் நடத்து அங்கு சூழலையே தலைகீழாக மாற்றி வைத்துள்ளது அமெரிக்கா.. ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா போர் ஒரு பக்கம், இஸ்ரேல் - ஈரான் போர் ஒரு பக்கம் என மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பது போல், ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா, ஏமன் உள்ளிட்ட நாடுகள் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதுபோலவே தற்போது போரில் நுழைவதாக ஏமன் நாட்டில் உள்ள் ஹவுதி கிளற்சியாளர்கள் படை அறிவித்துள்ளது. ஏமனை பொறுத்தவரை அங்கு ஏற்கனவே உள்நாட்டுப் பிரச்சனைகள் அதிகம். அங்கு ஏமன் தலைநகர் சனா உள்பட வடக்கின் பெரும் பகுதி ஹவுதி கட்டுப்பாடில் தான் இருந்து வருகிறது. சவுதி அரேபியாவின் ஆதரவுடன் தெற்கு மற்றும் கிழக்கு ஏமனில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே அதிபர் தரப்பு கைவசம் வைத்துள்ளது.
இந்தச்சூழலில் ஏமனில் உள்ள ஹவுதி படை ஈரானுக்கு ஆதரவாக போரில் நுழைவதாக அறிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே ஏமன் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. தங்கள் நாட்டு கப்பல்களை எங்கள்( ஏமன்) கடல் எல்லையில் இருந்து உடனடியாக வெளியேற்றுங்கள் என்றும், இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் ஹவுதி படை எச்சரித்துள்ளது. இந்தப்போரில் அடுத்தடுத்து இருதரப்பு ஆதரவு அதிகரிப்பதனால் மூன்றாம் உலகப்போர் அல்லது பிராந்திய அளவிலான போரையாவது உருவாக்கும் ஆபத்து இருப்பதாக உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.