கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், கட்டிகள் செலவு செய்த செலவுகள் பட்டியலில் 1,494 கோடி ரூபாயுடன் பா.ஜ., முதலிடத்திலும், காங்கிரஸ் 620 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல், ஒடிஷா, சிக்கிம் ஆகிய மாநில சட்டசபை தேர்தலும் கடந்த ஆண்டு மார்ச் 16 முதல் ஜூன் 06 வரை நடைபெற்றன. இந்த தேர்தலின் போது அனைத்து கட்சிகளும் 3,352 கோடி ரூபாயை செலவிட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நடந்து 90 நாட்களுக்குள்ளும், சட்டசபை தேர்தல் நடந்து 75 நாட்களுக்குள்ளும் கட்சிகள் தேர்தல் ஆணையகத்திடம், செலவு தொடர்பான தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்து, இந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் விபரங்கள் பின்வருமாறு:
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா மற்றும் நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் 2,204 கோடி ரூபாயை செலவழித்துள்ளன.
அதன்படி, இக்கட்சிகள் செலவழித்த தொகையில் 65.75 சதவீதமாகும். அதில் ஆளும் பா.ஜ., 1,494 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது. இது மொத்த செலவுத்தொகையில் 44.56 சதவீதம். காங்கிரஸ், 620 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.
இந்த தேர்தலுக்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், தேசிய கட்சிகளுக்கு 6,930 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளன. அத்துடன், மாநில கட்சிகளுக்கு, 515 கோடி ரூபாய் கிடைத்துள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.